9ம் வகுப்பு மாணவியிடம் அசிங்கமாக நடந்து கொண்ட பெங்களூரு ஆசிரியர்
பெங்களூரு: பெங்களூருவில் உள்ள ஒரு பிரபலமான பள்ளிக் கூடத்தில், 9ம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கு, அப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியரே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த ஆசிரியர் தற்போது தலைமறைவாகி விட்டார். அவரைப் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
அந்த ஆசிரியரின் பெயர் லட்சுமிகாந்த் (40). கடந்த ஜனவரி மாதம் இவர் 9ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அச்சிறுமி தனது பெற்றோரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார்.
உடனடியாக பெற்றோர் இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் புகார் கூறினர். இதையடுத்து அந்த ஆசிரியரை பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது. ஆனால் இதுகுறித்து போலீஸாருக்கு பள்ளி நிர்வாகம் புகார் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் மாணவியின் உறவினர் ஒருவர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார்.
இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால், அதற்குள்ளாக லட்சுமிகாந்த் தலைமறைவாகி விட்டார். அவர் பெங்களூரை விட்டு வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது.
அவரைத் தேடி வரும் போலீஸார் தற்போது பள்ளி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுப்பது குறித்து சட்ட ஆலோசனை நடத்தி வருகின்றனராம்.