ஆந்திராவில் திருமண வீட்டில் உறவுக்கார சிறுமிகள் மூவரை கடத்தி, எரித்துக் கொன்ற நபர்
ஹைதராபாத்: ஆந்திராவில் தனக்கு திருமணம் நடக்காத விரக்தியில் ஒருவர் தனது உறவினர்களின் 3 மகள்களை கடத்தி எரித்துக் கொலை செய்துள்ளார்.
ஆந்திர மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் துப்பல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் ரகுபதி ரெட்டி. விவசாயிகள் தலைவர். அவரது பேத்திகள் ஸ்ரீ(9), அக்ஷயா(6) மற்றும் குஷி(4) ஆகியோர் நிஜாமாபாத்தில் நடந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். அந்த திருமண விழாவில் அவர்களின் உறவினரான நரேந்திர ரெட்டியும்(37) கலந்து கொண்டார்.
நரேந்திர ரெட்டி தனக்கு இன்னும் திருமணம் ஆகாத விரக்தியில் உள்ளார். இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக முன்பு மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்நிலையில் அவர் அந்த 3 சிறுமிகளையும் சாக்லெட் வாங்கித் தருவதாகக் கூறி கடத்திச் சென்று எரித்துக் கொலை செய்துவிட்டார். இதற்கிடையே சிறுமிகளை காணவில்லை என்று போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் சிறுமிகளை தேடியபோது அவர்களின் எரிந்த உடல்கள் நிஜாமாபாத் நகருக்கு வெளியே கிடப்பது இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் நரேந்திர ரெட்டியை தேடி வருகின்றனர். அவருக்கு திருமணமாகாத விரக்தியுடன், நிதி பிரச்சனையும் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.