கொளுத்தும் வெயிலில் முதுகில் செங்கல்லோடு முட்டி போட வைத்துத் தண்டனை... 7ம் வகுப்பு மாணவி பலி!
ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் வீட்டுப்பாடம் செய்யாததால் வெயிலில் முட்டி போட வைக்கப்பட்ட 7ம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் பசூர் மாவட்டம் லத்கரை சேர்ந்த 7ம் வகுப்பு மாணவி ரூப்வந்தி குமாரி. சம்பவத்தன்று ரூப்வந்தி வீட்டுப்பாடம் எழுதாமல் பள்ளிக்குச் சென்றுள்ளார். இதனால் கோபமடைந்த ஆசிரியர் சத்யேந்திர யாதவ், ரூப்வந்திக்கு வெயிலில் முட்டி போடும் தண்டனையை அளித்துள்ளார். கூடவே சிறுமியின் முதுகில் செங்கல்லையும் அவர் கட்டியுள்ளார்.
இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட அச்சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால், அங்குள்ள சதார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் அம்மாணவி. சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய மாணவி தொடர்ந்து உடல்நலக் குறைவுடனேயே காணப்பட்டுள்ளார்.
மாணவியின் குடும்பம் ஏழ்மையில் வாடியதால் தொடர்ந்து அவரால் உரிய சிகிச்சைப் பெற முடியவில்லை. இதனால், உடல்நிலை மோசமாகி அச்சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
தற்போது அச்சிறுமியின் பெற்றோர்கள் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்துள்ளனர். மாவட்ட கல்வி அதிகாரி இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளார். விசாரணையின் அடிப்படையில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதி அளித்துள்ளார்.