வாஸ்து செய்வதாககூறி ரூ.1.3 கோடி கொள்ளை... போலி சாமியார் கைது
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் தொழிலதிபர் வீட்டில் வாஸ்து பூஜை செய்வதாக கூறி, ரூ.1.3 கோடி பணம், நகைகளை கொள்ளையடித்துச் சென்ற போலி சாமியாரை போலீஸார் கைது செய்தனர்.
ஹைதராபாத்தை சேர்ந்தவர் தொழிலதிபர் மதுசூதன் ரெட்டி. மதுசூதன் தனது வீட்டில் குடும்ப பொருளாதார நிலை, மருத்துவ பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என பூஜை செய்ய விரும்பியுள்ளார். இதையடுத்து அவரது வீட்டுக்கு சாமியாரை வைத்து பூஜை நடத்தியுள்ளார்.
சிவா என்னும் அந்த சாமியார் அண்மையில் தனது சிஷ்யர்களுடன் மதுசூதன் வீட்டில் வாஸ்து பூஜை செய்ய வந்துள்ளார். அப்போது, அந்த சாமியார் பிரசாதம் என கூறி மயக்க மருந்து கலந்த இனிப்பை வீட்டில் இருந்தவர்களுக்கு வழங்கியுள்ளனர். இதை சாப்பிட்ட மதுசூதன், அவரது மனைவி, மகன் ஆகியோர் சுயநினைவை இழந்து மயங்கி விழுந்துள்ளனர். இதையடுத்து, வீட்டில் இருந்த ரூ.1.3 கோடி ரூபாய் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்த சிவா அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
பின்னர் மதுசூதன் அளித்த புகாரை அடுத்து ஹைதராபாத் போலீஸில் விசாரணை மேற்கொண்டனர். போலீஸார் நடத்திய விசாரணையில், சிவா பல்வேறு மோசடி சம்பவங்களில் தொடர்புடையது தெரியவந்தது. இந்நிலையில் பெங்களூருவில் இருந்த சிவாவை போலீஸார் நேற்று கைது செய்தனர். இவருடன் கார் ஓட்டுநர், சிஷ்யர்கள் என மேலும் 5 பேரை கைது செய்த போலீஸார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.