தம்பி திருமணத்திற்கு ரூ. 3 கோடி மதிப்புள்ள 7 கிலோ தங்கசட்டை அணிந்து வந்த ‘தங்க மகன்’
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் ஜவுளி வியாபாரி ஒருவர் தனது தம்பியின் திருமணத்திற்கு ரூ. 3 கோடி மதிப்புள்ள 7 கிலோ தங்க சட்டையை அணிந்து வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த ஜவுளி வியாபாரி பங்கஜ் பராக். பள்ளி படிப்பு வரை படித்துள்ள பங்கஜ் இன்று தனது 46வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
இந்நிலையில் நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற தனது தம்பியின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் பங்கஜ். அப்போது அவர் 7 கிலோ எடையில் தயாரிக்கப் பட்ட தங்கச் சட்டை அணிந்து வந்திருந்தார். இதன் மதிப்பு ரூ. 3 கோடி எனக் கூறப்படுகிறது.
பங்கஜ் பராக்கின் தங்க சட்டையைக் கண்ட திருமணத்திற்கு வந்திருந்தவர்கள், ஆச்சர்யத்துடன் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். சிலர் செல்பியும் எடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய பங்கஜ், ‘எனக்கு சிறு வயதிலிருந்தே தங்கம் மீது அலாதி பிரியம். எப்போதும் நான் 3 கிலோவுக்கு குறையாமல் தங்க நகைகளை அணிவது வழக்கம்.
தற்போது கூட நான் 3 கிலோ தங்க நகைகளை அணிந்துள்ளேன். எனது மூக்கு கண்ணாடி கூட 30 கிராம் எடையில் செய்யப்பட்டது. எனது 45-வது பிறந்தநாளின் போது, சுமார் ரூ. 1 கோடி செலவில் 3கிலோ எடையுள்ள தங்க சட்டை தைத்து அணிந்திருந்தேன். எனவே, எனது 46வது பிறந்தநாளுக்காக இந்த 7 கிலோ சட்டையை உருவாக்கினேன். ஆனால் ஒரு நாள் முன்னதாக எனது தம்பியின் திருமணம் நடைபெறுவதால் இதற்காக இந்த சட்டையை அணிந்து கொண்டேன்' என்றார்.
"தம்பி".. ஊர் பூராவும் திருட்டுப் பசங்க நிறைய சுத்துறாங்க.. ஜாக்கிரதை ப்ளீஸ்!