தங்கத்தைப் பணமாக்கும் புதிய திட்டம்... மக்களின் சேமிப்பு அதிகரிக்கும் என கிரிசில் தகவல்
டெல்லி : தங்கத்தில் முதலீடு செய்பவர்கள், அதனை பணமாக்கிக்கொள்ளும் வகையில் கொண்டுவரப்படவுள்ள புதிய திட்டத்தின் மூலம், சேமிப்பு அதிகரிக்கும் என்று தர மதிப்பீட்டு நிறுவனமான கிரிசில் கூறியுள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முழு அளவிலான முதல் பொது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இன்று தாக்கல் செய்தார்.
அப்போது அவர், உலக தரத்திற்கு இணையாக உள்ள இந்திய பத்திர சந்தை மேம்படுத்தப்படும் என்றும், தங்கத்தை நேரடியாக வாங்குவதற்கு பதிலாக தங்கப்பத்திரம் திட்டமும் மேம்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் அதனை பணமாக்கிக்கொள்ளும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறிய அருண் ஜேட்லி, வங்கிகளில் தங்கத்தை டெப்பாசிட் செய்து நிதி திரட்டும் புதிய திட்டத்தின் மூலம், தங்கத்தின் மீதான ஆவண வடிவ முதலீடுகள் ஊக்குவிக்கப்படும் என்றார்.
மேலும், வெளிநாடுகளில் இருந்து தங்க நாணயங்கள் இறக்குமதி செய்யப்படுவதை குறைக்கும் வகையில், இந்தியாவிலேயே அசோக சக்கரம் பொறிக்கப்பட்ட தங்க நாணயங்கள் தயாரிப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கும். தங்கம் வாங்குவதற்கு டெபிட் மற்றும் கிரிடிட் கார்டுகள் பயன்படுத்துவது ஊக்குவிக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மத்திய அரசின் தங்கப்பத்திரம் திட்டத்தின் மூலம் முதலீடுகள் அதிகரிக்கும் என்று தர மதிப்பீட்டு நிறுவனமான கிரிசில் தெரிவித்துள்ளது. மேலும், தங்கத்தை பணமாக்கும் புதிய திட்டத்தின் மூலம் மக்களின் சேமிப்பும், வருவாயும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் கிரிசில் கூறுகிறது.












Click it and Unblock the Notifications