கோபிநாத் முண்டே உடல் சொந்த ஊரில் முழு அரசு மரியாதையுடன் தகனம்!! சிதைக்கு மகள் தீ மூட்டினார்!!
மும்பை: சாலை விபத்தில் சிக்கி காலமான மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேவின் உடல் முழு அரசு மரியாதையுடன் இன்று அடக்கம் செய்யப்பட்டது. முண்டேவின் சிதைக்கு அவரது மகள் பங்கஜா தீ மூட்டினார்.
டெல்லியில் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார் மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே. அவரது உடல் நேற்று டெல்லி பாஜக தலைமையகத்தில் வைக்கப்பட்டு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
அதன் பின்னர் மும்பைக்குக் கொண்டு வரப்பட்டது. இன்று காலை மும்பையிலிருந்து சிறப்பு விமானம் மூலம் லத்தூர் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து சாலை வழியாக பர்லி கிராமத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
பின்னர் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது. மறைந்த கோபிநாத் முண்டேவிற்கு, பிராத்ன்யா என்ற மனைவியும், பங்கஜா, பிரீதம், யஷஸ்ரீ என்ற பிள்ளைகளும் உள்ளனர்.
அவரது உடல் இன்று பகல் 2 மணி அளவில் அவரது சொந்த ஊரான பர்லியில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அவருக்கான இறுதி சடங்குகளை அவரது மகளும் பாஜக எம்.எல்.ஏவும் ஆன பங்கஜா மேற்கொண்டார். அவரே சிதைக்கும் தீ மூட்டினார்.
கோபிநாத் முண்டே இறுதி நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான அவரது ஆதரவாளர்கள் திரண்டிருந்தனர்.