தெலுங்கானா தனி மாநிலத்தை உருவாக்குவதில் மத்திய அரசு உறுதி: பிரதமர் மன்மோகன்சிங்
டெல்லி: தெலுங்கானா தனி மாநிலத்தை உருவாக்குவதில் மத்திய அரசு உறுதியுடன் இருப்பதாக பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்க டெல்லியில் நேற்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு லோக்சபா சபாநாயகர் மீராகுமார் ஏற்பாடு செய்திருந்தார்.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மன்மோகன்சிங், தெலுங்கானா தனி மாநிலத்தை உருவாக்குவதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது. சட்டத்தின்படி அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
முக்கிய மசோதாக்களை நாடாளுமன்றத்தில் சுமூகமாக நிறைவேற்றுவது குறித்து அனைத்து அரசியல் கட்சிகளுடனும் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்றார்.
மத்திய அமைச்சர்கள் குழு ஆலோசனை
இதனிடையே தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பது தொடர்பாக பரிந்துரைகளை அளிக்க மத்திய அரசால் அமைக்கப்பட்ட மத்திய அமைச்சர்கள் குழு, நேற்று கூடி ஆலோசனை நடத்தியது.
மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் ஏ.கே. அந்தோனி, ப. சிதம்பரம், குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தேசிய பாதுகாப்புத் துறை ஆலோசகர் சிவசங்கர் மேனன், மத்திய உள்துறை செயலாளர் அனில் கோஸ்வாமி உள்ளிட்ட அதிகாரிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஒருமித்த கருத்து இல்லை
இந்தக் கூட்டத்தில், ஆந்திரத்தை பிரித்து அமைக்கப்பட இருக்கும் 2 மாநிலங்களுக்கும் அரசியலமைப்பு சட்டத்தின் 371-டி பிரிவின்கீழ் சிறப்பு அந்தஸ்தை அளிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. புதிதாக உருவாக்கப்பட இருக்கும் மாநிலத்தில் ராயலசீமா பகுதியைச் சேர்ந்த 2 மாவட்டங்களை சேர்க்க வேண்டும் என்ற பரிந்துரை குறித்தும் அமைச்சர்கள் குழு விவாதித்தது.
ஆனால், இந்தக் கூட்டத்தில் கருத்து ஒற்றுமை ஏற்படாததால், புதிய மாநிலம் தொடர்பான அறிக்கை மற்றும் வரைவு மசோதாவை அமைச்சர்கள் குழுவால் இறுதி செய்ய முடியவில்லை.
இதனையடுத்து, மத்திய அமைச்சர்கள் குழு இன்று மீண்டும் கூடி ஆலோசனை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications