பாம்பன் கால்வாய் வழியாக சேதுசமுத்திர திட்டத்தை அமைக்கிறது மத்திய அரசு!
டெல்லி: பாம்பன் கால்வாய் வழியாக சேதுசமுத்திரத் திட்டத்தை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
தமிழகத்தின் முக்கிய துறைமுக நகரமான சென்னையிலிருந்து, மற்றொரு துறைமுக நகரம் தூத்துக்குடிக்கு கப்பல்கள் நேராக செல்ல முடியாது. இலங்கையை சுற்றி பல கி.மீ., பல நாட்கள் பயணம் செய்து, திருகோணமலை வழியாகத் தான் செல்ல முடியும்.
அதை விட நாகப்பட்டினத்தில் இருந்தும் தூத்துக்குடிக்கு கப்பல்கள் செல்ல முடியாது. ஒடிசாவின் பாரதீப் துறைமுகத்திலிருந்து தூத்துக்குடிக்கு நிலக்கரி கொண்டு வரப்படுகிறது. இது இலங்கையை சுற்றி தான் வந்து சேருகிறது. இதனால் செலவு அதிகரிப்பதுடன் இலங்கை துறைமுகங்களுக்கு வருவாய் அதிகரிக்கிறது.
இதுபோல சர்வதேச கப்பல்களும், இலங்கையை சுற்றித் தான் செல்ல வேண்டியுள்ளது. இதற்காகத்தான் சேதுக்கால்வாய் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டம் 2005ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. ஆனால் கடலுக்குள் இருக்கும் ராமர் பாலம் என்ற புனித இடத்தை இடிக்காமல் சேதுக்கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இது தொடர்பாக தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இதனால் மாற்றுவழியில் சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆராய உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. இதனடிப்படையில் ரயில் இந்தியா தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார சேவை (ஆர்.ஐ.டி.இ.எஸ்) அமைப்பிடம் மத்திய அரசு ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்ய கூறியிருந்தது.
இந்நிலையில் லோக்சபாவில் நேற்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், ராமர் பாலத்தை இடிக்காமல் சேது சமுத்திர திட்டத்தை மாற்று வழியில் மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ரயில் இந்தியா தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார சேவை (ஆர்.ஐ.டி.இ.எஸ்) அமைப்பு ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. பாம்பன் கால்வாய் வழியாக சேது சமுத்திர கால்வாயை அமைப்பது பற்றி இக்குழு பரிந்துரை செய்துள்ளது என்றார்.
ரைட்ஸ் அமைப்பு தாக்கல் செய்திருக்கும் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
- பாம்பன் கால்வாய் பகுதியில் முக்கிய தடையாக இருப்பது புள்ளிவாசல் மற்றும் குருசடை பவளப்பாறை தீவுகளுக்கு இடையேயுள்ள குறுகலான வழிதான்.
- மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி இடையே நிலவும் நீரோட்டம் காரணமாக இந்த குறுகலான இடத்தில் மணல் சேருகிறது. இந்த கால்வாயின் அகலம் 125 மீட்டர். ஆழம் 2.13 மீட்டர். அலை அதிகமாக இருக்கும் நேரத்தில் மட்டும் இப்பகுதி வழியாக செல்வது சிக்கல்.
- இந்த கால்வாயை 12 மீட்டர் ஆழம் தோண்டினால், 30 ஆயிரம் டன் எடை மற்றும் 21 மீட்டர் உயரம் உள்ள கப்பல்கள், பாம்பன் கால்வாய் குறுக்கேயுள்ள பாம்பன் பாலத்தை கடந்து செல்ல முடியும்.
- பாம்பன் கால்வாய் பகுதி 136 கி.மீ நீளமுள்ளது. இதில் 54 கி.மீ பாக் ஜல சந்தி பகுதியில் வருகிறது. இந்த 54 கி.மீ தூரம் பகுதி சேது சமுத்திர திட்டத்தின் கீழ் ஏற்கனவே தூர் வாரப்பட்டுள்ளது. இங்கு இன்னும் 1 மீட்டர் மட்டும் கூடுதலாக ஆழப்படுத்த வேண்டும்.
- பாம்பன் கால்வாய் பகுதியில் 43 கி.மீ து£ரத்துக்கு மட்டும் 12 மீட்டர் ஆழம் தோண்டப் பட வேண்டும். மீதப்பகுதி 30 ஆயிரம் டன் கப்பல்கள் செல்லும் அளவுக்கு இயற்கையாகவே ஆழமாக அமைந்துள்ளது.
- இத்திட்டத்தின் மொத்த செலவே, 2,350 கோடி ரூபாய் தான் ஆகும்
- இத்திட்டத்தை செயல்படுத்தும் போது பாம்பன் ரயில் பாலம் 2 ஆண்டுகளுக்கு மூடப்படும். அந்த பாலம் சில மீட்டர்கள் தகர்க்கப்பட்டு பெரிய கப்பல்கள் செல்ல வழி ஏற்படுத்தப்படும்.
- தேவைப்பட்டால் பாம்பன் சாலை பாலமும் மூடப்பட்டு குறிப்பிட்ட அளவு தூரம் தகர்க்கப்படும்.
இவ்வாறு ரைட்ஸ் அமைப்பு பரிந்துரைத்துள்ளது.