"ரமணா" வைத்தியமா?... டெங்குவால் இறந்த சிறுமியின் தந்தையிடம் ரூ.15 லட்சம் கறந்த மருத்துவமனை!
டெங்கு காய்ச்சலில் இறந்த சிறுமியின் பெற்றோரிடம் ரூ. 15 லட்சம் கொள்ளை அடித்ததாக தனியார் மருத்துவமனை மீது புகார் எழுந்துள்ளது.
Recommended Video

டெல்லி: டெங்கு காய்ச்சலுக்கு ரூ.15 லட்சம் வசூலித்ததாக வந்த புகாரை அடுத்து டெல்லி போர்ட்டீஸ் மருத்துவமனையில் நடந்தது என்ன என்பது குறித்தும் சிறுமிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தும் விசாரணை நடத்தப்படும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நட்டா தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி, டெல்லியைச் சேர்ந்த ஜெயந்த் சிங்கின் மகள் ஆத்யா சிங் (7) காய்ச்சல் காரணமாக துவாரகாவில் உள்ள ராக்லேண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 4-ஆவது வகை டெங்கு இருப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து மருத்துவர்களின் பரிந்துரைக்கேற்ப சிறுமியை குருகிராமில் உள்ள போர்டீஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு 15 நாட்கள் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவர் உயிரிழந்தார்.
|
பெற்றோரிடம் இருந்து கொள்ளை
இதுகுறித்து சிறுமியின் தந்தை ஜெயந்த் சிங் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், 2,700 கை உறை உள்பட டெங்குவுக்காக 15 நாட்களுக்கு ரூ.15 லட்சத்தை கட்டணமாக கொள்ளையடித்துள்ளது போர்ட்டீஸ் மருத்துவமனை. 7 வயது சிறுமிக்கு ஒரு நாளைக்கு 40 சிரிஞ்சுகளில் ரத்த மாதிரிகளை எடுத்துள்ளனர்.

500 ரூ மாத்திரையை ரூ.3,100-க்கு தந்துள்ளனர்
அந்த சின்னஞ்சிறிய சிறுமிக்கு மொத்தம் 600 சிரிஞ்சுகளை பயன்படுத்தியுள்ளனர். அதற்கு மருத்துவமனை பில்லில் கட்டணம் போட்டுள்ளனர். மருத்துவமனைக்கு சிறுமி சென்றபோது மயக்கத்தில் இருந்ததால் அவருக்கு ரூ.500 மதிப்பிலான ஆன்ட்டி பாக்ட்டீரியல் மருந்தை செலுத்தினர். அதன்பிறகு, அதே மருந்துக்கு எங்களிடம் கட்டணமாக ரூ.3,100 வசூலித்தனர்.

மருத்துவர்கள் சிகிச்சை இல்லை
வார இறுதி நாள்களில் மருத்துவமனைக்கு வருவதும் இல்லை. ஆனால் இன்சூரன்ஸ் கட்டணத்துக்கு மேல் மருத்துவமனை பில் சென்றுவிட்டால் அந்த நிர்வாகத்தினர் பணம் கேட்டு நச்சரிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அந்த ரசீதில் செலவு குறித்த பிரேக் அப்- களும் இருக்காது. கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதி மருத்துவர்கள் எங்களிடம் கூறும்போது சிறுமியின் மூளை 70 முதல் 80 சதவீதம் வரை பாதித்து விட்டது. முழுவதுமாக மீட்க முடியாது என்றனர்.

ரூ.15 லட்சம் செலவு
ஆனால் ரூ.15 லட்சம் மதிப்பிலான பிளாஸ்மா சிகிச்சை அளிக்க எங்களை மருத்துவர்கள் நிர்பந்தித்தனர். இதனால் நாங்கள் வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறோம் என்று சொன்னவுடன் அவர் இறந்துவிட்டதாக எங்களிடம் கூறினர். இதனால் போர்ட்டீஸ் மருத்துவமனையில் எங்களது மகள் ஏற்கெனவே இறந்திருக்கலாம் என்றும் பணம் பறிக்கும் நோக்கத்தில் இவர்கள் வைத்தியம் பார்த்ததாகவும் சந்தேகம் எழுந்துள்ளது என்று கூறியுள்ளார்.

கூறுவது என்ன
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், அந்த சிறுமிக்கு சிகிச்சை அளிப்பதில் மருத்துவர்கள் எந்த தவறையும் செய்யவில்லை. அந்த சிறுமியின் நிலை மிகவும் மோசமாக உள்ளதாக பெற்றோரிடம் கூறிவிட்டோம். தினமும் அவர்களுக்கு சிறுமியின் நிலை குறித்து விளக்கப்பட்டது. ஆனால் செப்டம்பர் 14-ஆம் தேதி மருத்துவர்களின் அறிவுரையை மீறி அவர்கள் வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயற்சித்தனர். அப்போது அந்த சிறுமி இறந்துவிட்டார்.

சிகிச்சைகள் என்ன
சிறுமிக்கு டெங்கு ஷாக் சின்ட்ரோம் என்ற நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரால் வென்ட்டிலேட்டர் உதவியுடன்தான் சுவாசிக்க முடிந்தது. மருத்துவமனையில் சிறுமி இருந்த 15 நாள்களில் அதிக அதிர்வெண் கொண்ட வென்ட்டிலேட்டர், தொடர் சிறுநீரக மாற்று சிகிச்சை, நரம்பு வழியாக செலுத்தப்படும் நுண்ணுயிர் கொல்லிகள், வலி நிவாரணிகள், தூக்கமின்மைக்கான சிகிச்சை என வழங்கப்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு கொடுக்கப்பட்ட மருந்துகள் அனைத்தும் மருத்துவமனை பதிவுகளில் உள்ளது. மருந்துக்கான உரிய விலையே வசூலிக்கப்பட்டது என்று மருத்துவமனை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
|
நடவடிக்கை எடுக்க முடிவு
மருத்துவமனையின் பண கொள்ளை குறித்து ஜெயந்த் சிங்கின் நண்பர்கள் மத்திய சுகாதார துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவுக்கு ஆத்யாவின் மருத்துவமனை ரசீதுகளை அனுப்பினர். இதையடுத்து நட்டா கூறுகையில், [email protected] என்ற முகவரிக்கு விவரங்களை அனுப்புங்கள். இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications