சீனாவுக்கு இந்தியா பதிலடி: இருநாட்டு எல்லையில் ரூ.5ஆயிரம் கோடியில் உள்கட்டமைப்பு
டெல்லி: இந்திய-சீன எல்லையில் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.5 ஆயிரம் கோடியை ஒதுக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய-சீன எல்லையில் அருணாச்சல பிரதேச மாநிலம் அமைந்துள்ளது. இம்மாநிலத்தின் சில பகுதிகளை சீனா சொந்தம் கொண்டாடுகிறது. எல்லை பகுதியில் சாலை அமைப்பது உள்ளிட்ட உள்கட்டமைப்பை சீனா மேற்கொண்டுவருகிறது. மேலும், அவ்வப்போது இந்த எல்லையில் சீனா அத்துமீறி வந்தது. இதை தடுக்க தவறியதாக முந்தைய மத்திய அரசு மீது விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் பாஜக தலைமையிலான புதிய அரசு அமைந்தபிறகு சீனாவுடனான எல்லை பிரச்சினைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மோடியின் பூடான் பயணமும் இதை நோக்கிய திட்டம்தான் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் பாஜக அரசின் முதலாவது பட்ஜெட்டில், சீன எல்லையில் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.5ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே 28 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் கூடுதல் நிதி ஒதுக்கீடு மூலம், ரோடு, குடிநீர், மருத்துவமனை, மின்சார வசதியை எல்லைபகுதியில் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
எல்லையில் போதிய வசதியில்லாத காரணத்தால், சீன எல்லையில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தில்தான் அருணாச்சல பிரதேச மாநில மக்களின் கிராமங்கள் அமைந்துள்ளன. இதனால் சீனா எளிதாக ஊடுருவ முடிகிறது. எல்லைக்கு அருகே அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து மக்களை குடியமர்த்தினால் மக்கள் உதவியுடன் ஊடுருவலை தடுக்க முடிவதுடன், அந்த பகுதி இந்திய எல்லைதான் என்பதற்கான வாதத்திற்கும் வலு சேர்க்க முடியும் என்று மத்திய அரசு கருதுகிறது.
உள்துறை இணை அமைச்சர் கிரேன் ரிஜிஜு, அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதால் எல்லை பாதுகாப்புக்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைத்துவருவதாகவும் கூறப்படுகிறது. எல்லைப்பகுதியில் நடைபெறும் கட்டமைப்பு பணிகளுக்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் விரைந்து அனுமதியளிக்கும் என்று அத்துறைக்கான மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் தெரிவித்திருந்தது நினைவு கூறத்தக்கது.












Click it and Unblock the Notifications