நரேந்திர மோடிக்கு 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு
டெல்லி: குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடிக்கு 3 அடுக்கு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முன்வந்துள்ளது.
நரேந்திர மோடியின் பாட்னா பொதுக்கூட்டத்தில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரது பாதுகாப்பை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதில் வெளிப்புற அடுக்கிற்கான பாதுகாப்பை குஜராத் மாநில போலீசார் வழங்குவார்கள்.

மோடியைச் சந்திக்க விரும்பும் நபர்களைக் கையாள்வது இவர்களின் பொறுப்பு. மோடியை சந்திக்கும் நபர்களின் பெயர்ப் பட்டியல் எடுக்கப்பட்டு அவர்களின் புகைப்படங்களையும் பாதுகாப்பு அமைப்பினர் முன்கூட்டியே வைத்துக் கொள்வர். அந்த நபர்கள் மோடியைச் சந்திப்பதற்கு வண்ண அடையாள அட்டைகள் வழங்கப்படும்.
2வது அடுக்குப் பாதுகாப்பை குஜராத் காவல்துறையின் கமாண்டோ வீரர்கள் வழங்குவர். இனி மோடி பங்கேற்கும் பகுதியில் வெடிகுண்டு இருக்கிறதா என்பதைக் கண்டறியும் பணியில் தங்கள் தொழில்நுட்பக் குழுவை குஜராத் கமாண்டோக்கள் ஈடுபடுத்துவார்கள்.
மோடியின் பொதுக் கூட்டங்களில் கண்ணிவெடி உள்ளிட்ட குண்டுகள் இருக்கின்றனவா என்ற சோதனையை குஜராத் போலீஸாரை மேற்கொள்ள வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சோதனையானது பொதுக்கூட்டம் நடைபெறுவதற்கு முந்தைய இரவு, கூட்டம் நடக்கும் நாளன்று காலை மற்றும் மோடி பொதுக்கூட்டத்துக்கு வருவதற்கு ஒரு மணிநேரத்துக்கு முன்பு என மூன்று முறை மோப்ப நாய்களின் உதவியுடன் நடத்தப்படும்.
மோடிக்கு அளிக்கப்படும் 3 அடுக்குப் பாதுகாப்பை என்எஸ்ஜி எனப்படும் தேசிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 36 கமாண்டோ வீரர்களும் குஜராத் காவல்துறை கமாண்டோக்களும் அளிப்பார்கள். மோடிக்கான உள்வட்டப் பாதுகாப்பை இப்போது 18 என்எஸ்ஜி கமாண்டோக்கள் அளித்து வருகின்றனர். அவருக்கு உள்ள பயங்கரவாத அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு இது 36 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மொத்தம் மோடிக்கான பாதுகாப்பு பணியில் 108 பேர் ஈடுபடுவர்.












Click it and Unblock the Notifications