குஜராத் வரும் டொனால்ட் ட்ரம்ப்.. 3 மணி நேரம்தான் இருப்பார்.. அரசுக்கு செலவு எவ்வளவு தெரியுமா?
அகமதாபாத்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிப்ரவரி 24ம் தேதி குஜராத்திலுள்ள அகமதாபாத் நகருக்கு வருகிறார். அவரை வரவேற்க ஒரு பிரமாண்ட நிகழ்ச்சிக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
ட்ரம்ப் வருகையையொட்டி, 10,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஒரு அமெரிக்க அதிபர் குஜராத் வருவது இதுதான் முதல் முறை. எனவே, சுமார் 1 லட்சம் மக்கள், அவருக்கு வரவேற்பு கொடுக்கும் நிகழ்வில் பங்கேற்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டின் இறுதியில் அமெரிக்க பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. அப்போது, அமெரிக்காவில் கணிசமாக வசிக்கும் குஜராத்தியர்களை ஈர்க்க ட்ரம்ப் இந்த வருகையை பயன்படுத்துவார் என கூறப்படுகிறது.
அகமதாபாத் துணை போலீலஸ் கமிஷனர் விஜய் பட்டேல் இன்று அளித்த பேட்டியில், மோடி மற்றும் ட்ரம்ப் இருவரும், அகமதாபாத் ஏர்போர்ட்டிலிருந்து, காந்தி ஆசிரமம் வரை, ரோடு ஷோ நடத்த உள்ளனர். அது 24 கி.மீ நீளம் கொண்ட பாதை. பிறகு, மோடெரா பகுதியில், 1.10 லட்சம் ரசிகர்கள் ஒரே நேரத்தில் அமர்ந்து பார்க்கும் வகையில் ரூ.700 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை, தலைவர்கள் திறந்து வைப்பார்கள்.
எனவே தலைவர்கள் பயணிக்கும் பகுதிகளில் உள்ள வீடுகள், ஹாஸ்டர்கள் போன்றவற்றில் தங்கியுள்ளோர் குறித்த விபரம் சேகரிக்கப்பட்டுள்ளது. 25 ஐபிஎஸ் அதிகாரிகள், 65 உதவி கமிஷனர்கள், 200 இன்ஸ்பெக்டர்கள், 800 சப்-இன்ஸ்பெக்டர்கள், 10,000 கான்ஸ்டபிள்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதனிடையே, 24ம் தேதி ட்ரம்ப் மொத்தம் 3 மணி நேரம் அகமதாபாத் நகரில் இருப்பதற்காக மாநில அரசு ரூ.100 கோடி வரை செலவிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், நகர சாலையை சீரமைப்பது மற்றும் புதிய ரோடு அமைப்பதற்கு ரூ.80 கோடி, அதிபரின் பாதுகாப்பிற்காக ரூ.12-15 கோடி, கிரிக்கெட் ஸ்டேடியம் துவக்க விழாவிற்கான போக்குவரத்து உள்ளிட்ட செலவீனங்கள் ரூ.7-10 கோடி, ரோடு ஷோ நடைபெறும் பகுதிகளில் சாலைகளில் மலர்களால் அலங்கரிப்பது, வண்ணம் பூசுவுது உள்ளிட்டவற்றுக்காக ரூ.6 கோடி, ரோடு ஷோவின்போது நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளுக்காக ரூ.4 கோடி வரை செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications