15 நாட்கள் அவகாசம் அளித்த ஆளுநர்... மெஜாரிட்டியை நிரூபிப்பது ஜுஜுபி என்ற குமாரசாமி
கர்நாடக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமிக்கு 15 நாட்கள் அவகாசம் அளித்துள்ளார் ஆளுநர்.
பெங்களூர்: கர்நாடக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமிக்கு ஆளுநர் வஜுபாய் வாலா 15 நாட்கள் காலஅவகாசம் அளித்துள்ளார்.
கர்நாடகத்தில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைப்பது யார் என்று கேள்வி எழுந்தது. எண்ணிக்கை அடிப்படையில் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தார்.
காங்கிரஸ்- ஜேடிஎஸ் கூட்டணி பெரும்பான்மை இருந்த போதிலும் எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். இதைத் தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் எடியூரப்பாவுக்கு நேற்று அவகாசம் அளித்தது.
சட்டசபையில் பேச்சு
இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்று போவதற்கு பதில் நாமாகவே பதவி விலகினால் நல்லது என்று எண்ணிய எடியூரப்பா நேற்று சட்டசபையில் உருக்கமாக பேசிவிட்டு பதவி விலகுவதாக அறிவித்தார்.
ஆளுநர் அழைப்பார்
இதையடுத்து காங்கிரஸ்- ஜேடிஎஸ் கூட்டணி மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தனர். இந்த கூட்டணி சார்பில் ஏற்கெனவே பேசி முடிக்கப்பட்டது போல் குமாரசாமியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
பரமேஸ்வராவுக்கு துணை முதல்வர்
இதனிடையே குமாரசாமி வரும் 23-ஆம் தேதி பதவியேற்க முடிவு செய்துள்ளார். மேலும் அவரது அமைச்சரவை பட்டியலும் உத்தேசமாக வெளியானது. அதில் துணை முதல்வர் பதவி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பரமேஸ்வராவுக்கு வழங்கப்படுவதாக தெரிகிறது.
உடனே நிரூபிக்க ரெடி
இந்நிலையில் குமாரசாமி கர்நாடக சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் காலஅவகாசத்தை ஆளுநர் வஜுபாய் வாலா அளித்தார். ஆனால் அவ்வளவு நாட்கள் எல்லாம் தேவையில்லை. பெரும்பான்மையை நிரூபிக்க எப்போதும் வேண்டுமானாலும் தான் தயாராக இருப்பதாக குமாரசாமி தெரிவித்துள்ளார்.