பான் கார்டு, வங்கிக்கணக்குடன் ஆதாரை இணைக்க மார்ச் 31 வரை காலக்கெடு நீட்டிப்பு
பான் கார்டு, வங்கி கணக்கு ஆகியவற்றுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் வருகிற 2018 மார்ச் 31ஆம்தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: நாடு முழுவதும் வரி செலுத்துவோர் பலர் இன்னும் பான் கார்டை ஆதாருடன் இணைக்கவில்லை. எனவே, இதற்கான அவகாசம் அடுத்தாண்டு மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என்று மத்திய நிதியமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
வங்கி கணக்கு, வருமான வரி கணக்கு, செல்போன் இணைப்பு, மற்றும் அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் பலன்களை பெற ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது.
அரசு நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு ஆதார் எண் இணைக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அதோடு, வங்கி கணக்கு மற்றும் செல்போன் எண்ணுடனும் இணைக்கப்படுகிறது.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு
பான் கார்டுடன் ஆதாரை இணைக்கும் திட்டம், பல மாதங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 1ஆம் தேதி கொண்டு வரப்பட்ட சட்டத் சீர்திருத்தம் 139 ஏஏ(2)-ன்படி பான்கார்டுடன் ஆதாரை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பலர் பொதுநலன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த இணைப்புக்கான கால அவகாசத்தை கடந்த ஆகஸ்ட் 31 வரை முதல்முறையாக அரசு நீட்டித்தது.
காலக்கெடு நீட்டிப்பு
2வது முறையாக டிசம்பர் 31 வரை பான் ஆதார் இணைப்பதற்கான காலக்கெடுவை நீட்டித்தது. இந்த அவகாசத்தை அடுத்தாண்டு ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நீட்டிப்பதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியது.
மார்ச் 31 கடைசி நாள்
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதன்படி பான் கார்டு, வங்கி கணக்கு ஆகியவற்றுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் வருகிற 2018 மார்ச் 31ஆம்தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 6 கடைசி நாள்
செல்போன் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான காலக் கெடுவை நீடிக்க முடியாது. 2018 பிப்ரவரி 6ஆம்தேதி கடைசி நாள் என்பதில் மாற்றம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.