விவசாயிகளுக்கான டிடி கிசான் சேனல் – தூர்தன்ஷன் மூலம் இன்று முதல் துவக்கம்
டெல்லி: மத்திய அரசின் தூர்தர்ஷன் மூலம் இன்று முதல் டிடி கிசான் சேனல் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேனலின் ஒளிபரப்பை பிரதமர் மோடி இன்று காலை தொடங்கி வைத்தார்.
இந்த சேனல் அனைத்து கேபிள் மற்றும் டி.டி.ஹெச் இணைப்புகள் மூலம் கட்டாயமாக எடுத்துச் செல்லப்பட வேண்டிய சேனலாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்புத்துறை அமைச்சர் அருண் ஜேட்லி கூறும்போது, "நம் நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் விவசாயிகள் இருக்கின்றனர். எனவே கேபிள் சட்டத்தின் கீழ், டிடி கிசான் சேனல் கட்டாய மாக ஒளிபரப்பப்பட வேண்டிய சேனலாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.
இதன் மூலம் கட்டாயமாக ஒளி பரப்பப்பட வேண்டிய சேனல்களின் பட்டியலில் 25வது சேனலாக டிடி கிசான் சேனல் இடம்பெற்றுள்ளது.
இந்த சேனல் தனது ஒளிபரப்பைத் தொடங்கியவுடன் வாரத்தில் 7 நாட்கள், 24 மணி நேரமும் விவசாயம் மற்றும் நாட்டில் உள்ள கிராமப்புறங்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும். வானிலைத் தகவல்களும் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.