சரக்கு சேவை வரி மசோதாவை நிறைவேற்ற நாடாளுமன்ற சிறப்பு மழைக்கால கூட்டத் தொடர்!
டெல்லி: சரக்கு, சேவை வரி மசோதாவை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றத்தின் மழைக்கால சிறப்பு தொடர் கூட்டப்படும் என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் வெங்கையா நாயுடு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நெருக்கடியான இந்த நேரத்தில் இந்திய பொருளாதாரத்தை வலுப்படுத்தியாக வேண்டும். அதற்கு சரக்கு மற்றும் சேவை வரிகள் சட்ட திருத்த மசோதாவை உடனடியாக நிறைவேற்ற வேண்டியது மிகவும் அவசியமாகும்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முடித்து வைக்கப்படவில்லை. தேதி குறிப்பிடாமல் மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் 2வது பகுதியை கூட்டுவது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்.
சரக்கு மற்றும் சேவை வரிகள் சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றுவதில் அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்படும் என்று நம்புகிறேன். இது தொடர்பாக நாடாளுமன்ற இரு அவைகளின் காங்கிரஸ் தலைவர்களுடனும் மற்ற கட்சிகளுடனும், பேசி வருகிறோம்.
நாட்டின் நலன் கருதி மாற்றுமுறை ஆவணச் சட்டம், ரியல் எஸ்டேட் மசோதா, நிலம் கையகப்படுத்தும் மசோதா உள்ளிட்ட முக்கிய சட்ட மசோதாக்களை நிறைவேற்ற காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஒத்துழைக்கவேண்டும்.
சரக்கு மற்றும் சேவை வரிகள் சட்ட மசோதா நிறைவேறினால் புதிய வரி விதிப்பு முறையால் நாட்டின் வளர்ச்சி விகிதம் 1.5 முதல் 2 சதவீதம் வரை அதிகரிக்கும். இல்லையென்றால், நாட்டின் பொருளாதாரத்தில் 2 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும்.
இவ்வாறு வெங்கையா நாயுடு கூறினார்.












Click it and Unblock the Notifications