ஜிஎஸ்டி: கைவினை பொருட்களுக்கு வரி விலக்கு - தீம் பார்க் டிக்கெட் கட்டண வரி குறைப்பு
வகையான கைவினை பொருட்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 49 பொருட்களுக்கு ஜிஎஸ்டியில் வரி குறைக்கப்பட்டுள்ளது.
டெல்லி: டெல்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 29 கைவினை பொருட்களுக்கு வரி விலக்கு உட்பட 49 பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 25 முதல் இது அமலுக்கு வரும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
பொழுது போக்கு பூங்காக்கள் டிக்கெட் கட்டணத்தின் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியதை ஏற்றுக்கொண்டு 28 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து மாநிலங்களின் நிதி அமைச்சர்களும் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக நடத்த அரசு விரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் ஜிஎஸ்டியில் ரியல் எஸ்டேட் தொழிலையும் சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. டெல்லி, ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்கள் ரியல் எஸ்டேட்டை ஜிஎஸ்டி வளையத்தில் கொண்டுவர ஆர்வம் காட்டி வருகின்றன.
அதே நேரத்தில் ரியல் எஸ்டேட் துறையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர தமிழக அமைச்சர் ஜெயக்குமார் எதிர்ப்பு தெரிவித்தார். அதே நேரத்தில் தவிடு, அலுமினிய பாத்திரங்கள், பொழுது போக்கு பூங்காக்கள் ஆகியவற்றிர்க்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்றும் ஜெயக்குமார் அந்த கூட்டத்தில் வலியுறுத்தினார்.
இதனிடையே இன்றைய கூட்டத்தில் கைவினை பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கைகளால் தயாரிக்கப்படும் பேப்பர் கவர்கள், போஸ்ட் கார்ட், பாக்ஸ்கள் உள்ளிட்ட 29 வகையான கைவினை பொருட்களுக்கு விலக்கு அளிக்க கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.
அதே போல தமிழக அமைச்சர் ஜெயக்குமார் வைத்த கோரிக்கையை ஏற்று பொழுது போக்கு பூங்கா டிக்கெட் கட்டணத்திற்க விதிக்கப்படும் 28 சதவிகித வரியில் இருந்து 18 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.
20 லிட்டர் தண்ணீர் கேன் உட்பட மொத்தம் 49 பொருட்களுக்கு வரி குறைப்பு செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ள நிதியமைச்சர் அருண் ஜெட்லி இந்த வரி குறைப்பு ஜனவரி 25 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று கூறியுள்ளார்.