குஜராத் முதல்வர் விஜய் ரூபானி திடீரென ராஜினாமா.. என்ன காரணம்? வெளியான பரபர தகவல்
காந்தி நகர்: குஜராத்தில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் முதல்வர் விஜய் ரூபானி இன்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இந்தியாவில் பாஜகவின் கோட்டையாகக் கருதப்படும் மாநிலங்களில் முதன்மையானது குஜராத். கடந்த 1998ஆம் ஆண்டு முதலே பாஜகவின் ஆட்சி தான் குஜராத்தில் உள்ளது.
பிரதமர் ஆவதற்கு முன்னர் நரேந்திர மோடி தொடர்ந்து மூன்று சட்டசபைத் தேர்தல்களில் வென்று, சுமார் 12 ஆண்டுகளாகக் குஜராத் முதல்வராக இருந்தார்.

முதல்வர் ராஜினாமா
இப்படி பாஜக மிக வலுவாக உள்ள குஜராத்தின் முதல்வராகக் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் இருந்து வந்தார் விஜய் ரூபானி. இந்நிலையில், 65 வயதான விஜய் ரூபானி இன்று திடீரென தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவ்ராத்திடம் விஜய் ரூபானி ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அவர் எதற்காக ராஜினாமா செய்தார் என்பது குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை. அதேபோல பாஜக சார்பிலும் விஜய் ரூபானி ராஜினாமா குறித்து எந்தவொரு விளக்கமும் அளிக்கப்படவில்லை.

பிரதமர் நிகழ்ச்சி
குஜராத் மாநிலத்திற்கு அடுத்த முதல்வர் தேர்ந்தெடுக்கப்படும் வரை தானே முதல்வராகத் தொடரவுள்ளதாகவும் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் குஜராத் மாநில மக்களுக்கு நன்றி தெரித்துக்கொள்வதாகக் குறிப்பிட்ட அவர், அடுத்து கட்சி தனக்கு அளிக்கும் பொறுப்பைச் சிறப்பாகச் செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார். இன்று காலை தான் பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தின் அகமதாபாத்தில் சர்தர்தம் பவனை திறந்த வைத்தார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் விஜய் ரூபானி பங்கேற்றிருந்தார். இந்நிகழ்ச்சி முடிந்த சில நிமிடங்களிலேயே விஜய் ரூபானி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

என்ன காரணம்
அவரது ராஜினாமாவை யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை. அடுத்த ஆண்டு இறுதியில் அங்குச் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளதால், கட்சியை வலுப்படுத்தும் நோக்கிலேயே விஜய் ரூபானி பதவி விலகியுள்ளதாகக் கூறப்படுகிறது. கட்சியின் தலைமையின் உத்தரவின் அடிப்படையிலேயே அவர் ராஜினாமா செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஏனென்றால், நேற்று முன்தினம் தான் உள் துறை அமைச்சர் அமித் ஷா குஜராத் சென்றிருந்தார். தனிப்பட்ட காரணங்களால் அமித் ஷா குஜராத் சென்றதாகக் கூறப்பட்டாலும் கூட, அப்போது விஜய் ரூபானியை சந்தித்ததாக அம்மாநில அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பி எல் சந்தோஷ்
மேலும், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷும் தற்போது குஜராத்தில் முகாமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போதுள்ள நிலைமை குறித்து அடுத்த முதல்வரைத் தேர்ந்தெடுப்பது குறித்தும் குஜராத் மாநில பாஜக தலைவர் சி ஆர் பாட்டில் உள்ளிட்ட அம்மாநில முக்கிய பாஜக தலைவர்களுடன் பி. எல் சந்தோஷ் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முதல்முறை இல்லை
2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக வென்ற பிறகு, நரேந்திர மோடி பிரதமரானர். அப்போது ஆனந்திபென் படேல் குஜராத் முதல்வராகப் பொறுப்பேற்றார். இருப்பினும் 2 ஆண்டுகள் மட்டுமே ஆனந்திபென் படேல் முதல்வராக இருந்தார். இதேபோல 2017 சட்டசபைத் தேர்தலுக்கு ஓர் ஆண்டிற்கு முன், அவர் ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து விஜய் ரூபானி முதல்வர் பொறுப்பை ஏற்றார். இப்போது அதே பாணியில் விஜய் ரூபானியும் ராஜினாமா செய்துள்ளார். ஆனாலும் விஜய் ரூபானி ராஜினாமா செய்வதற்கான எந்தவொரு சமிக்ஞையும் இல்லாமலேயே இருந்தது. நேற்றுகூட லவ் ஜிகாத் மற்றும் பசுவதைக்கு எதிராகத் தனது அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும் என விஜய் ரூபானி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications