தொண்டர்கள் தாக்குதல் அச்சம்: ரூ3 கோடிக்கு இன்ஷூரன்ஸ் செய்யப்பட்ட குஜராத் காங். அலுவலகம்
தொண்டர்களின் தாக்குதல் அச்சத்தால் குஜராத் காங்கிரஸ் தலைமை அலுவலகம் ரூ3 கோடிக்கு இன்ஷுரன்ஸ் செய்யப்பட்டு உள்ளது.
Recommended Video

அகமதாபாத் : தொண்டர்கள் தாக்குதல் நடத்துவார்களோ என்கிற அச்சத்தால் குஜராத் மாநில காங்கிரஸ் தலைமையகத்தை ரூ3 கோடி ரூபாய்க்கு இன்ஷூரன்ஸ் செய்துள்ளனர்.
குஜராத் சட்டபை தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் அறிவித்தது. அதே நேரம் ஆளும் பா.ஜ.க அரசு மீது அதிருப்தியில் இருக்கும் பட்டேல் இன மக்களின் போராட்டக்குழுவோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது காங்கிரஸ்.
அதே நேரத்தில் தங்களுடன் கலந்து ஆலோசிக்காமல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டதால் சூரத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகங்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக இது தொடர்கதையாகி வருகிறது.

மூன்று கோடி இன்ஷூரன்ஸ்
மேலும் ஆங்காங்கே வேட்பாளர் தேர்வில் குளறுபடிகள் நடந்துள்ளதாக, போராட்டங்களும் அலுவலகங்களின் மீது கல்வீச்சும் நடந்துவருகின்றன. இதனால், பயந்துபோன காங்கிரஸ் நிர்வாகிகள் பால்டியில் உள்ள காங்கிரஸ் மாநில தலைமையகத்தை ரூ3 கோடிக்கு இன்ஷூரன்ஸ் செய்துள்ளனர்.

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
ஏற்கனவே 2007 மற்றும் 2012ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வேட்பாளர் அறிவிப்பின் போதும் தங்களுக்கு சீட் கிடைக்காத தலைவர்களின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதில் பலகோடி ரூபாய்க்கு பொருட்கள் சேதமடைந்து இருகின்றன. இதனை உணர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் இன்ஷூரன்ஸ் செய்ததோடு மட்டுமில்லாமல், போலீஸ் பாதுகாப்பு, தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் பாதுகாப்பு, தொண்டர்கள் படை மேலும் சிசிடிவி கேமராக்களையும் பொருத்தி கண்காணித்து வருகிறார்கள்.

கடந்த ஆண்டுகளில் சேதம்
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறும்போது, காங்கிரஸ் தொண்டர்கள் மிகவும் கோபக்காரர்கள். கடந்த தேர்தலின் போதே இவர்களால் பல லட்சம் இழப்பு ஏற்பட்டது. அதைத் தவிர்க்கவே இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த முறை அசம்பாவிதங்கள் எதுவும் நிகழாது என்று அவர் குறிப்பிட்டார்.

ஆலோசிக்கும் பா.ஜ.க நிர்வாகிகள்
இந்நிலையில், பா.ஜ.க தனது அலுவலகத்திற்கு இதுவரை எந்த காப்பீடும் எடுக்கவில்லை என்ற போதிலும், பல கோடி மதிப்பிலான பிரச்சார கருவிகளுக்கும், வாகனங்களுக்கும் இன்ஷூரன்ஸ் காப்பீடு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது பா.ஜ.க தொண்டர்களிடையே நடந்து வரும் சில வன்முறை சம்பவங்களால் அலுவலகத்திற்கும் காப்பீடு எடுப்பது குறித்து கட்சி நிர்வாகிகள் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications