இளம்பெண் உளவு விவகாரம்: அமித் ஷாவை விசாரிக்க கமிஷன்- மத்திய அமைச்சரவை ஒப்புதல்
டெல்லி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உத்தரவுப்படி இளம்பெண்ணை குஜராத் போலீசார் உளவு பார்த்தது தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்க மத்திய அரசு முடிவு செய்து ஒப்புதல் அளித்துள்ளது.
குஜராத்தை சேர்ந்த இளம்பெண்ணை போலீசார் உளவு பார்த்ததாக ‘கோப்ரா போஸ்ட்‘ என்ற புலனாய்வு பத்திரிகை தகவல் வெளியிட்டது.

இந்த குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக மோடியின் நெருங்கிய நண்பரும், குஜராத் உள்துறை முன்னாள் அமைச்சருமான அமித் ஷா- போலீஸ் அதிகாரி சிங்கால் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் அடங்கிய சி.டியையும் வெளியிட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே புதன்கிழமை அளித்த பேட்டியில், இளம்பெண்ணை உளவு பார்த்தது தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி, பல தொண்டு அமைப்புகளும், பெண்கள் அமைப்புகளும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் மனு கொடுத்துள்ளன.
ஜனாதிபதி பரிந்துரையின் பேரில் மத்திய உள்துறை அமைச்சகம் அதை பரிசீலித்து வருகிறது.
இது எந்த கட்சிக்கும் எதிரான நடவடிக்கை இல்லை. குற்றச்சாட்டு உண்மை என தெரியவந்தால், இது தொடர்பாக விரைவில் விசாரணைக்கு உத்தரவிடப்படும். அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன‘ என்றார்.
இதனிடையே உச்ச நீதிமன்ற நீதிபதி அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த கமிஷன் சுதந்திரமாக செயல்பட்டு விசாரணை மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே சம்மந்தப்பட்ட பெண்ணின் தந்தை, தேசிய மகளிர் ஆணையத்துக்கும், குஜராத் மாநில மகளிர் ஆணையத்துக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், தனது மகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை, அவர் எந்த புகாரும் தர விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
பாஜக கண்டனம்:
ஒப்புதல் வழங்கப்பட்டவுடன் தனது கடும் கண்டனத்தை பாரதீய ஜனதா கட்சி, தெரிவித்துள்ளது. 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் தங்கள் பிரதமர் வேட்பாளரை எதிரியாகக் கருதி அவரை ஒடுக்கும் நோக்கிலேயே இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.
குழு அமைக்கப்பட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும், இக்குழுவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும் பா.ஜ. மூத்த தலைவர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.
இது முற்றிலும் மாநில அரசு சம்பந்தப்பட்ட விவகாரம். ஏற்கனவே அம்மாநில அரசு இது குறித்து விசாரிக்க ஒய்வு பெற்ற நீதிபதியை கொண்டு விசாரணை ஆணையம் அமைத்துள்ளபோது, மத்திய அரசு தனியாக ஒரு விசாரணை குழு அமைக்க தேவையில்லை என அவர் மேலும் கூறினார்.












Click it and Unblock the Notifications