மதுவிலக்குக்காக செல் நம்பர், வாட்ஸ் அப் எண், இ மெயில் அறிவிப்பு - குஜராத் அரசு அதிரடி
குஜராத் மாநிலத்தில் நடைமுறையில் உள்ள மதுவிலக்கை கடுமையாக அமல்படுத்த முடிவு செய்துள்ள அம்மாநில அரசு, அதற்காக பிரத்யேக செல் நம்பர், வாட்ஸ் அப் நம்பர் மற்றும் இ மெயில் முகவரியை அறிவித்துள்ளது.
காந்திநகர்: குஜராத்தில் நடைமுறையில் உள்ள மதுவிலக்குச் சட்டத்தை கடுமையாக அமல்படுத்தப்படுவதற்கான திருத்த மசோதாவை குஜராத் அரசு தாக்கல் செய்துள்ளது. இதையொட்டி, பிரத்யேக செல் எண், வாட்சாப் எண் மற்றும் இமெயில் முகவரி ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி, பிரத்யேக ஃபேஸ்புக் பக்கம், டோல் ஃப்ரீ அழைப்பு எண் உள்ளிட்டவையும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை மாநில உள்துணை இணையமைச்சர் பிரதீப் சின் ஜடேஜா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், குஜராத் மாநிலத்தில் நடைபெறும் மதுவிலக்கு அத்துமீறல்கள், சாலை விபத்துகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை கட்டுக்குள் கொண்டுவர, இந்த பிரத்யேக புகார் எண்களும், இமெயில், ஃபேஸ்புக் முகவரிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
மதுவிலக்குச் சட்டம் என்பது சமூக பாதுகாப்புக்கானது என்றும், இதில் இருந்து குற்றவாளிகள் யாரும் தப்பிக்கக்கூடாது என்பதற்காகவே, புதிய கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளோம் என்றும், அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு வரையிலும், மதுவிலக்குச் சட்டத்தின்படி, சட்டவிரோதமாக மது தயாரிப்பு மற்றும் விற்பனை செய்வோர் ரெய்டில் சிக்கினால் தலா ரூ.200 அல்லது ரூ.500 அபராதம் மற்றும் 3 மாதங்கள் சிறைதண்டனை விதிக்கப்பட்டு வந்தது.
ஆனால், தற்போது இதுவே ரெய்டில் சிக்கினால் ரூ.1 லட்சம் வரை அபராதம் மற்றும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.