குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டளிப்பது கட்டாயமாகிறது!
அகமதாபாத்: குஜராத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பொதுமக்கள் ஓட்டளிப்பதை கட்டாயமாக்கும் சட்டத்திற்கு அம்மாநில கவர்னர் கோலி ஒப்புதல் அளித்துள்ளார்.
பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, கடந்த 2009ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல்களில் வாக்காளர்கள் கட்டாயம் ஓட்டளிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதாவை கொண்டு வந்தார். இந்த மசோதா குஜராத் சட்டசபையில் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது

ஆனால், அப்போதைய குஜராத் கவர்னர் கமலா பெனிவால், ‘கட்டாய ஓட்டு என்பது இந்திய அரசியமைப்பு சட்ட விதி 21ன் படி சட்ட விரோதமானது என்றும், தனி மனித சுதந்திரத்தை பாதிக்கும் செயல்' என்றும் கூறி அதில் கையெழுத்திட மறுத்து விட்டார்.
அதனைத் தொடர்ந்து, கடந்த 2011ம் ஆண்டு இந்த சட்ட திருத்த மசோதா மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, மீண்டும் கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்றதைத் தொடார்ந்து, குஜராத் மாநில கவர்னராக இருந்த கமலா பெனிவால் மாற்றப்பட்டு, தற்போது ஓ.பி. கோலி கவர்னராக நியமிக்கப்பட்டார். அவர் இந்த சட்டதிருத்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இந்த சட்டதிருத்தத்தின்படி, உள்ளாட்சித்தேர்தலில் வாக்காளர் ஓட்டளிக்காவிட்டால் அவர் சட்டரீதியான நடவடிக்கையையும், தண்டனையையும் எதிர்கொள்ள வேண்டி வரும்.
கவர்னர் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதையடுத்து, ஓட்டளிக்காத வாக்காளர்களுக்கு எந்த விதமான சட்ட நடைமுறைகளை மேற்கொள்வது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
குஜராத்தில் அடுத்த ஆண்டு உள்ளாட்சித்தேர்தல் நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த சட்டம் அமலுக்கு வரும்போது, ஓட்டளிப்பதை கட்டாயமாக்கிய முதல் மாநிலம் என்ற பெயரை குஜராத் பெறும்.












Click it and Unblock the Notifications