லுடோவால் வந்த லடாய்.. மனைவியை கண்ணுமண்ணு தெரியாமல் விளாசிய கணவர்.. லாக்டவுனில் வெறித்தனம்
லூடோ விளையாட்டு வினையில் முடிந்து கணவன் மனைவியை சரமாரி அடித்துவிட்டார்
வதோதரா: என்ன கொடுமை பாருங்க.. லாக்டவுனால் வீட்டோடு இருக்கும்போதுதான் குடும்ப வன்முறை அதிகமாக இருக்கிறது. இது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. வதோதராவில் ஒரு புருஷன் தனது மனைவியை கொடூரமாக அடித்ததில் அவரது முதுகெலும்பு காயமடைந்து விட்டதாம். இத்தனைக்கும் சாதாரண ஆன்லைன் விளையாட்டால் வந்த வினை இது.
லுடோ கேம்.. இதுதான் அந்தப் பெண்ணை இப்போது காயப்படுத்த காரணமாக அமைந்த ஆன்லைன் விளையாட்டு. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் அந்தப் பெண். தற்போது லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே இருந்து வருகிறார். இவரது கணவர் குழந்தைகளும் கூட வீட்டிலேயே இருந்து வருகிறார்கள்.

போரடிக்குதே என்பதற்காக ஆன்லைனில் இந்த லூடோ கேமை கண்டுபிடித்து கணவனும், மனைவியும் விளையாட ஆரம்பித்தனர். போகப் போக அதில் ஈடுபாடு அதிகமாகி தீவிரமாக தொடர ஆரம்பித்து விட்டனர். இதில் அந்தப் பெண்தான் எப்பவும் ஜெயிப்பாராம். மனைவியிடம் தோற்றுப் போவதே கணவருக்கு வேலையாகப் போய் விட்டது.
என்ன இது நம்மை எப்பவுமே இவ தோக்கடிச்சிட்டிருக்காளே என்று மனைவி மீது கோபமாகி விட்டார் கணவர்.. மனசுக்குள் ஆண் திமிரும் சேர்ந்து கொள்ள அந்தப் பெண்ணை நையப்புடைத்து விட்டார். அடித்த அடியில் அப்பெண்ணின் முதுகெலும்பு காயமடைந்து விட்டதாம். இதனால் வலியில் துடித்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சையில் அப்பெண் உள்ளார்.
இதுகுறித்து மன நல ஆலோசகர்கள் கூறுகையில், இது குடும்ப வன்முறையாகும். இதற்கு முக்கியக் காரணம் தன்னை அடிக்கடி தோற்கடித்துக் கொண்டிருக்கிறாளே என்று மனைவி குறித்து வந்த ஈகோதான். தன்னை விட மனைவி ஸ்மார்ட் ஆக இருப்பதை பெரும்பாலான கணவர்கள் விரும்ப மாட்டார்கள். அந்த ஆணாதிக்க மனோபாவம்தான் இந்த நபரிடமும் இருந்துள்ளது. அது கோபமாக வெளிப்பட்டு மனைவியை அடித்து காயப்படுத்தியுள்ளார்.
ஆனால் தனது கணவர் மீது அந்தப் பெண் எந்தப் புகாரும் கொடுக்கவில்லை. இதனால் போலீஸாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கணவரும் மனைவியிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இனிமேல் இதுபோல நடந்தால் அவ்வளவுதான் என்று போலீஸாரும் அந்த நபரை எச்சரித்து விட்டு விட்டனர்.












Click it and Unblock the Notifications