நோ ஜாமீன்.. 6 மாத விசாரணை.. ஒட்டுக் கேட்பு.. குஜராத் பயங்கரவாத தடுப்பு சட்டத்தோட 'நிஜ' முகம்
அகமதாபாத்: குஜராத் மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய பயங்கரவாத தடுப்பு சட்டமானது தமிழகம் ஏற்கெனவே அனுபவித்த தடா, பொடா போன்றவற்றின் கொடிய அம்சங்களைக் கொண்டதாக கைதானால் ஜாமீனே கிடைக்காத பிரிவுகளைக் கொண்டதாக இருக்கிறது.
சர்ச்சைக்குரிய பிரிவுகளை உள்ளடக்கிய பயங்கரவாத தடுப்பு மசோதா குஜராத் மாநில சட்டசபையில் செவ்வாயன்று நிறைவேற்றப்பட்டது. 2003-ம் ஆண்டின் குஜராத் குற்றத் தடுப்பு மசோதா சர்ச்சைக்குரிய வகையில் திருத்தம் செய்யப்பட்டு குஜராத் பயங்கரவாத மற்றும் குற்றத் தடுப்பு மசோதாவாக செவ்வாயன்று நிறைவேறியது.
இதில் உள்ள பிரிவு 16 பிரச்சினைக்குரியதாக கூறப்படுகிறது. இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகிறவர்கள் விசாரணை அதிகாரிகளிடம் அளித்ததாக சொல்லப்படும் வாக்குமூலங்கள் நீதிமன்றத்தில் அப்படியே ஏற்றுக் கொள்ளப்படுமாம்.

வாக்குமூலம் செல்லும்
இந்த மசோதாவின் முக்கிய அம்சங்களில் சில:
காவல்துறை கண்காணிப்பு அதிகாரி மட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டவர் வாக்குமூலங்கள் அளித்தால் அது நீதிமன்றத்தில் நேரடியாக செல்லுபடியாகுமாறு இந்த மசோதா அமைக்கப்பட்டுள்ளது.

6 மாத விசாரணை
ஒருவர் கைது செய்யப்பட்டால் அவரிடம் 6 மாத காலம் வரை தொடர்ந்து விசாரணை நடத்தலாமாம். அதாவது விசாரணை கால அவகாசம் 90 நாட்களிலிருந்து 180 நாட்களாக அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

நோ ஜாமீன்
இந்த வழக்கின் கீழ் கைது செய்யப்படுபவர்களுக்கு ஜாமீன் கிடையாது. 20 (4) என்ற பிரிவு இதை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

ஒட்டுக் கேட்கலாம்
இணையம் வழி உரையாடல் மற்றும் தொலைபேசிப் பேச்சு ஆகியவற்றை இடைமறித்து ஒட்டுக் கேட்டு திரட்டப்படும் சாட்சியங்கள் நீதிமன்றத்தில் அனுமதிக்கப்படும். இந்த ஒட்டுக்கேட்புக்கு முழு அதிகாரம் கொடுக்கப்படுகிறது.

அரசியல் ஆதாயம்
இந்த புதிய மசோதாவை கடுமையாக எதிர்த்த காங்கிரஸ் உறுப்பினர் சக்திசின் கோஹில், இச் சட்டம் தேசிய குற்றவியல் சட்டத்துக்கு எதிரானது, மாநில அரசு இது போன்ற ஒரு சட்டத்தை ஏற்படுத்த அதிகாரம் இல்லை. அரசியல் ஆதாயத்துக்காக இந்த சட்டம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications