குஜ்ஜார் போராட்டத்தில் வன்முறை.. வாகனங்களுக்கு தீ வைப்பு… 144 தடை உத்தரவு… ராஜஸ்தானில் பதற்றம்
Recommended Video

டோல்பூர்:ராஜஸ்தான் மாநிலத்தில் குஜ்ஜார் இன மக்களின் போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. பல பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 5 சதவீத இடஒதுக்கீடு கோரி ராஜஸ்தான் மாநிலத்தில் குஜ்ஜார் சமூகத்தினர் கடந்த 8-ந் தேதி போராட்டத்தை தொடங்கி உள்ளனர். அந்த கோரிக்கையை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் ரயில் மறியல், சாலை மறியல், தர்ணா மற்றும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

போலீசார், ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந் நிலையில் குஜ்ஜார் இன மக்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். தோல்பூர் மாவட்டத்தில் ஆக்ரா-மோரேனா நெடுஞ் சாலையில் அமர்ந்து போராட்டக்காரர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அதில் பங்கேற்ற சிலர் வானத்தை நோக்கி 8 முதல் 10 ரவுண்டுகள் வரை துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சில போராட்டக்காரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்களை கல்வீசி தாக்கினார்கள்.
போலீசுக்கு சொந்தமான 3 வாகனங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டன. போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர். ஷவாய் மதோபூர் மாவட்டத்தில் டெல்லி-மும்பை ரயில் வழித்தடத்தில் குஜ்ஜார் அராக்ஷன் சங்ரிஷ் சமிதி அமைப்பின் தலைவர் கிரோரி சிங் பன்சிலா தலைமையில் ஏராளமானோர் தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
அதனால் அந்த வழித்தடத்தில் செல்லக்கூடிய ஏராளமான ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 5 நாட்களில் மட்டும் 250க்கும் மேற்பட்ட ரயில்களின் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் குஜ்ஜார் இன மக்கள் ரயில் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் காரணமாக, டோல்பூர். கரௌலி உள்ளிட்ட பல பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் ஏராளமான போலீசார், ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர்.












Click it and Unblock the Notifications