ஜாதவுக்கு மரணதண்டனை நிறைவேற்றினால்.... பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை!
டெல்லி: இந்திய ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதற்கு இந்தியா கடும் கண்டனத்தையும் எச்சரிக்கையையும் தெரிவித்துள்ளனது.
இந்திய கடற்படையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் குல்பூஷண் ஜாதவ். இவர் தங்கள் நாட்டில் உளவு பார்த்ததாக கூறி பாகிஸ்தான் பாதுகாப்பு துறை தொடர்ந்த வழக்கில் அந்நாட்டின் ராணுவ கோர்ட்டு நேற்று முன்தினம் அவருக்கு மரண தண்டனை விதித்தது.

பாகிஸ்தானின் இந்த செயல் இந்தியாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.
இப்பிரச்சினை நேற்று பாராளுமன்ற இரு அவைகளிலும் எதிரொலித்தது. காலையில் பாராளுமன்றம் கூடியதும் அனைத்து எம்.பி.க்களும் கட்சி வேறுபாடுகளை மறந்து குல்பூஷண் ஜாதவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
உறுப்பினர்களின் உணர்வுகளை ஏற்றுக்கொண்டு பதில் அளித்து பேசிய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், இந்த அவையும், இந்திய அரசும் பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறது. குல்பூஷண் ஜாதவ் விஷயத்தில் அவருக்கு நீதி கிடைக்க அனைத்துவித முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில், "குல்பூஷண் இந்தியாவின் புதல்வர். அவர் மீது தவறே இல்லை. இந்த விஷயத்தை நாங்கள் பாகிஸ்தான் ஜனாதிபதி கவனத்துக்கு கொண்டு செல்வோம். கடற்படை அதிகாரியின் உயிரைப் பாதுகாப்போம். அவர் எதையும் தவறாக செய்துவிடவில்லை. அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு புனையப்பட்டது. குல்பூஷண் ஜாதவை இந்திய தூதரக அதிகாரியை சந்திக்க விடாமல் தடுத்துவிட்டனர். இதில் இருந்தே இது கொலைக்கான திட்டமிட்ட செயல் என்பது தெளிவாகிறது,'' என்றார்.












Click it and Unblock the Notifications