செம்மரம் வெட்டியோர் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு.. 30 பேருக்கு வலை வீச்சு.. கடப்பாவில் பரபரப்பு
ஆந்திர மாநில வனப்பகுதியில் செம்மரம் வெட்டியோர் மீது ஆந்திர போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியது. தப்பியோடிய 30 பேரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
கடப்பா: ஆந்திர மாநில வனப்பகுதியில் செம்மரம் வெட்டியோர் மீது 5 ரவுண்டு துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர் போலீசார். தப்பியோடிய 30 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இதனால் கடப்பாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ளது லங்கமா வனப்பகுதி. இங்கு 30 பேர் கொண்ட கும்பல் செம்மரம் வெட்டுவதாக ஆந்திர போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதைப் பார்த்த செம்மரம் வெட்டுவோர் தங்களை தற்காத்துக் கொள்ள போலீசார் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
5 ரவுண்டு துப்பாக்கிச் சூடு
இதனையடுத்து, வானத்தை நோக்கி போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். 5 ரவுண்ட் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர். இதில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
தப்பியோட்டம்
துப்பாக்கியால் போலீசார் சுடத் தொடங்கிய உடன் அச்சமுற்ற 30 பேரும் உயிருக்கு பயந்து தப்பியோடிவிட்டனர். அவர்கள் வனப்பகுதியில் மறைந்துள்ளனரா அல்லது நகரப் பகுதிக்கு தப்பியோடிவிட்டனரா என்பது தெரியாமல் போலீசார் விழித்து வருகின்றனர்.
தனிப்படை
இந்நிலையில், தப்பியோடிய 30 பேரை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர். 5 தனிப்படைகள் மூலம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர் போலீசார்.
அடிக்கடி துப்பாக்கிச் சூடு
செம்மரம் வெட்டுவதாகக் கூறி தமிழர்கள் மீது கடுமையான தாக்குதல்களை ஆந்திரா போலீசார் நிகழ்த்தி வருகின்றனர். 20 தமிழர்கள் ஆந்திர வனப்பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு இன்று வரை நியாயம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.