பயங்கரவாதிகளுடன் ராணுவம் மோதல்.. பந்திபோரா வனப் பகுதியில் துப்பாக்கி சத்தம்.. தொடரும் பதற்றம்!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் இன்று காலை, நமது பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது. தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா எனும் பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, பாகிஸ்தான் மீது பல்வேறு தடை நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு உள்ளது. காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ள இந்தியா, 48 மணி நேரத்திற்குள் பாகிஸ்தானியர்கள் அனைவரையும் இந்தியாவிலிருந்து வெளியேற கெடு விதித்துள்ளது. சிந்து நதி ஒப்பந்தத்தை ரத்து செய்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் செல்வதை இந்தியா நிறுத்தியுள்ளது.
இந்நிலையில், பந்திபோரா மாவட்டத்தில் உள்ள குல்னார் பாசிபோரா வனப்பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட நிலையில், இராணுவத்தினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் தொடங்கி உள்ளது.
சந்தேகத்திற்கிடமான இடத்தை நமது இராணுவப் படைகள் நெருங்கியபோது, மறைந்திருந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். இதனால் மோதல் ஏற்பட்டது, துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என ராணுவ அதிகாரி தெரிவித்ததாக பிடிஐ தெரிவித்துள்ளது.
மேலும், இந்த துப்பாக்கிச்சூடு மோதல் சம்பவத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும், தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை தொடர்ந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக நேற்று ஜம்மு காஷ்மீரின் உத்தம்பூர் மாவட்டத்தில் பசந்த்நகர் பகுதியில் நமது பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் போது ஒரு ராணுவ வீரர் காயமடைந்து உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
"உளவுத்துறை தகவலின் அடிப்படையில், ஜம்மு-காஷ்மீருடன் கூட்டு நடவடிக்கை இன்று உதம்பூரின் பசந்த்கரில் தொடங்கப்பட்டது. அப்போது கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது. நமது துணிச்சலான வீரர்களில் ஒருவர் படுகாயமடைந்தார், பின்னர் அவருக்கு உடனடி மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்ட போதிலும் உயிரிழந்தார்," என்று இந்திய ராணுவத்தின் வொயிட் நைட் கார்ப்ஸ் X தளத்தில் பதிவிட்டது.












Click it and Unblock the Notifications