பஞ்சாபில் துப்பாக்கிச்சூடு சப்தம் கேட்டு காலையில் திடுக்கிட்டு கண்விழித்த தினாநகர் வாசிகள்
குர்தாஸ்பூர்: பஞ்சாபில் தினாநகர் பகுதி மக்கள் தீவிரவாதிகளின் துப்பாக்கிச்சூடு சப்தம் கேட்டுத் தான் இன்று காலை எழுந்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டம் தினாநகருக்குள் இன்று அதிகாலை புகுந்த தீவிரவாதிகள் பேருந்து மற்றும் காவல் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தினர். தீவிரவாதிகளின் துப்பாக்கிச்சூடு சப்தம் கேட்டு தான் தினாநகர் பகுதி மக்கள் காலையில் கண் விழித்துள்ளனர்.
துப்பாக்கிச்சூடு சப்தம் கேட்டு எழுந்த தினாநகர் மக்கள் பயந்து போய் வீடுகளுக்குள் முடங்கினர். டிவியை ஆன் செய்து என்ன நடக்கிறது என்ற விவரத்தை தெரிந்து கொண்டனர்.

கமல்ஜீத் சிங் மதாரு கூறுகையில்,
தீவிரவாதிகள் என்னை துப்பாக்கியால் சுட்டுவிட்டு என் மாருதி 800 காரை திருடிச் சென்றனர். அவர்கள் ராணுவ சீருடை அணிந்திருந்தனர் என்றார்.
கமல்ஜீத் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தீவிரவாத தாக்குதல் பற்றி அறிந்து நாங்கள் பயந்துவிட்டோம். தீவிரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடந்து வருகிறது என்று தினாநகர் காவல் நிலையம் அருகே வசிக்கும் குமார் தெரிவித்துள்ளார்.

போலீசார் கூறுகையில்,
தீவிரவாதிகள் மாருதி காரை பறித்துக் கொண்டு சாலையோர உணவகம் மீது தாக்குதல் நடத்தினர். இதில் வியாபாரி ஒருவர் பலியானார். அதன் பிறகு அவர்கள் பேருந்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் 4 பயணிகள் காயம் அடைந்தனர். பின்னர் சுகாதார நிலையம் மற்றும் போலீசாரின் குடும்பத்தார் வசிக்கும் கட்டிடம் நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர் என்றனர்.












Click it and Unblock the Notifications