வகுப்பறையில் செல் பயன்படுத்தியதை கண்டித்த ஆசிரியர்- மாணவி தற்கொலை
குர்கான்: வகுப்பறையில் செல்போன் பயன் படுத்தக் கூடாது என ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்த மாணவி பள்ளி வளாகத்திலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் குர்கான் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.
அரியானாவில் குர்கான் பகுதியிலுள்ள பள்ளி ஒன்றில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் மாணவி நேற்று வகுப்பிற்கு செல்போன் கொண்டு வந்துள்ளாள். பாடவேளையின் போது தனது நண்பனுக்கு வகுப்பறையில் இருந்த படியே எஸ்.எம்.எஸ் அனுப்பியுள்ளார் மாணவி. இது ஆசிரியருக்கு தெரிந்து விட்டதால் மாணவியை கண்டித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக அவளது பெற்றோரிடம் தெரிவிக்க இருப்பதாகவும் மிரட்டிய ஆசிரியர், மாணவியை வகுப்பறையிலிருந்து வெளியேற்றியுள்ளார்.
இதனால் மனமுடைந்த மாணவி பள்ளியிலுள்ள பாத்ரூமில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். பள்ளி நிர்வாகம் அளித்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ள போதும், ‘ஆசிரியரே மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக' மாணவியின் பெற்றோர் பள்ளியின் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.