'ஹேராம்' வந்த போது இந்துக்கள் சோற்றில் உப்பு போட்டு சாப்பிடலை... எகிறிய எச்.ராஜா
இந்துக்கள் இப்போதுதான் சோற்றில் உப்பு சேர்ப்பதாக எச். ராஜா ஆவேசத்துடன் கூறினார்
Recommended Video
ஸ்ரீவில்லிபுத்தூர்: இந்துக்கள் இதுவரை சோற்றில் உப்பு போட்டு சாப்பிடவில்லை.. இப்போது உப்பு போட்டு சாப்பிடுவது தவறா? என ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களிடம் பாய்ந்திருக்கிறார் எச். ராஜா
தமிழக அரசியலில் அநாகரீகத்தின் உச்சமாக பேசி வருகிறவர் பாஜக தேசிய செயலாளர் பதவி வகித்து வரும் எச். ராஜா. ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்துவை மிக இழிவாக பேசி கடும் கண்டனத்துக்குள்ளானவர் எச். ராஜா.
விதிகளை மீறிய எச். ராஜா
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்துக்கு சதி என கிளப்பிவிட்டார். விதிகளை மீறி புகைப்படம் எடுக்க தடை விதிக்கப்பட்ட பகுதியில் போட்டோ எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டார் எச். ராஜா.
ஜீயருடன் எச் ராஜா சந்திப்பு
இந்நிலையில் ஆண்டாள் விவகாரத்தை கையில் எடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் மீண்டும் உண்ணாவிரதத்தை அரங்கேற்றி வருகிறார். அவரை எச். ராஜா இன்று நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
ஹேராமை எதிர்க்கலையே ஏன்?
பின்னர் செய்தியாளர்களை எச். ராஜா சந்தித்தார். அப்போது, ஹேராம் படத்தில் ஆண்டாளை இழிவுபடுத்தியிருப்பது தொடர்பாக அப்போது ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை? என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதனால் கடும் கோபமடைந்த எச்.ராஜா கடுமையான சொற்களால் அர்ச்சித்தார்.
உப்பு சேர்த்து கொள்கிறோம்
மேலும், இந்துக்கள் அப்ப சோத்துல உப்பு சேத்துக்கலை.. இப்ப உப்பு சேத்து சாப்பிடுறது தப்பு என்றேளா? எனவும் எகிறினார். எச். ராஜாவின் இந்த ஆவேசம் பக்தர்களை முகம் சுளிக்க வைத்தது.