பெஷாவர் பள்ளி தாக்குதலுக்கு இந்தியாதான் காரணம்- லஷ்கர் தலைவன் ஹபீஸ் சயீத் விஷப் பேச்சு!
டெல்லி: பெஷாவரில் ராணுவப் பள்ளிக்கூடத்தில் தாலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா மீது பழி சுமத்திப் பேசியுள்ளான், இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி விட்டு பாகிஸ்தானில் பத்திரமாக வாழ்ந்து வரும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் நிறுவனரான ஹபீஸ் சயீத்.
இந்தியாவின் நம்பர் ஒன் எதிரியாக இருந்து வருபவன் சயீத். லஷ்கர் இ தொய்பாவை நிறுவியவன் இவன்தான். இந்தியாவில் பல பயங்கரவாதத் தாக்குதல்களை இவனது அமைப்பு நடத்தியுள்ளது. இதன் உச்சம் 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையில் 10 பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுறுவி நடத்திய வெறித் தாக்குதல். அந்தத் தாக்குதலை பாகிஸ்தானில் இருந்தபடி வழி நடத்தியது சயீத் கும்பல்.

3 நாட்கள் நீடித்த இந்த கொடும் தாக்குதலில் வெளிநாட்டினர் உள்பட 166 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர். தாக்குதலை நடத்திய 10 தீவிரவாதிகளில் அஜ்மல் கசாப் மட்டும் பிடிபட்டான். மற்ற 9 பேரும் கொல்லப்பட்டு விட்டனர்.
தற்போது சயீத், பாகிஸ்தான் அரசு, ராணுவம் மற்றும் ஐஎஸ்ஐ ஆகியவற்றின் சிறப்புக் கவனிப்பில் பாதுகாப்பாக, சுதந்திரமாக பாகிஸ்தானில் தங்கியுள்ளான். அவனை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு பலமுறை நமது அரசு கோரியும் அதை காதில் போட்டுக் கொள்வதே இல்லை பாகிஸ்தான் அரசு.
இந்த நிலையில் பெஷாவர் தாக்குதலுக்கு நாங்கள்தான் காரணம், பாகிஸ்தான் ராணுவத்திற்குப் பாடம் கற்பிக்கவே இவ்வாறு செய்தோம் என்று பாகிஸ்தான் தாலிபான் தீவிரவாதிகள் முறைப்படி அறிவித்து, தாக்குதலில் ஈடுபட்ட தீவி்ரவாதிகளின் புகைப்படங்களையும் போட்ட பிறகும் கூட இந்தியாதான் இதற்குக் காரணம் என்று இந்தியா மீது அபாண்டமாக பழிபோடும் முயற்சியில் பா்கிஸ்தானில் சிலர் இறங்கியுள்ளனர். முஷாரப்பே கூட இப்படித்தான் பேசியுள்ளார். இப்போது சயீத்தும் பேசியுள்ளான்.
இத்தனைக்கும் ஒட்டுமொத்த பாகிஸ்தானியர்களுக்கும் ஆதரவாகவும், ஆறுதலாகவும் இந்தியர்கள் உரத்த குரலில் பேசி வருகின்றனர், எழுதி வருகின்றனர். ஆனால் இரு நாட்டு மக்களின் மனதும் ஒன்று சேர்ந்து விடக் கூடாது என்ற கெட்ட எண்ணத்தில், பதட்டத்தில் சிலர் இந்தியா மீது பழியைப் போட்டு குழப்பம் ஏற்படுத்த கிளம்பியுள்ளனர்.
இந்த வகையில் சயீத் இந்த தாக்குதல் குறித்து பாகிஸ்தான் தேதிய தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், இந்தத் தாக்குதலின் பின்னணியில் இந்தியாதான் உள்ளது. இந்தியாவை இதற்காகப் பழிவாங்காமல் விட மாட்டோம் என்று கூறியுள்ளான்.
சயீத் தலைக்கு அமெரிக்க அரசு 10 மில்லியன் டாலர் விலை வைத்துள்ளது. ஆனால் பாகிஸ்தான் அரசோ அவனை சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் காத்து வருகிறது.
பாகிஸ்தான் ராணுவத்தின் செல்லப் பிள்ளையாக இவன் இருந்து வருவதால், இவன் மீது பாகிஸ்தான் அரசு அவ்வளவு சுலபமாக கை வைக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications