லஷ்கர் இ தொய்பாவின் புதிய தலைவராகிறார் ஹபீஸ் சயீத்தின் மருமகன் ஹபீஸ் ஹாலீத் வாலீத்
டெல்லி: பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத இயக்கமான லஷ்கர் இ தொய்பாவின் புதிய தலைவராக ஹபீஸ் சயீத்தின் மருமகன் ஹபீஸ் ஹாலீத் வாலீத் உருவெடுத்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
மும்பை தாக்குதல் வழக்கில் வழக்கில் முக்கிய குற்றவாளி ஹபீஸ் சயீத். லஷ்கர் இ தொய்பா, ஜமாத் உத் தவா ஆகியவற்றின் தலைவராக இருந்து வருகிறார்.
இந்தியாவால் தேடப்படுகிற இந்த பயங்கரவாதி, பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடி வருகிறார். தற்போது ஜம்மு காஷ்மீரில் ராணுவத்துக்கு எதிரான வன்முறைகளுக்கு காரணமே லஷ்கர் இ தொய்பா தான் என்பதும் இந்த வன்முறைகளை நிகழ்த்துவதின் பின்னணியில் ஹபீஸ் சயீத்தின் மருமகன் ஹபீஸ் ஹாலீத் வாலீத் இருப்பதும் தெரியவந்துள்ளது.
பகதூர் அலி கொட்டிய தகவல்கள்
ஜம்மு காஷ்மீரில் அண்மையில் பிடிபட்ட பகதூர் அலி என்ற பயங்கரவாதியிடன் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஏராளமான அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன. லஷ்கர் இ தொய்பாவின் அடுத்த தலைவராக ஹபீஸ் ஹாலீத் வாலீத்தை ஹபீஸ் சயீத் உருவாக்கி வருவதையும் பகதூர் அலி விவரித்திருக்கிறார்.
2015 வரை ரகசிய செயல்பாடு
ஹபீஸ் சயீத்துக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். 2003-ம் ஆண்டு முதல் ஹபீஸ் ஹாலீத் லஷ்கர் இ தொய்பாவுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். 2015-ம் ஆண்டு வரை ஹபீஸ் ஹாலீத் பற்றி யாருக்கும் தெரியாது. அந்த அளவுக்கு ரகசியமாக இயங்கி வந்தார். தற்போது காஷ்மீர் வன்முறைகளுக்குப் பின்னரே ஹபீஸ் ஹாலீத் குறித்து தெரியவந்துள்ளது.
பயங்கரவாதி பட்டியலில்...
42 வயதாகும் ஹபீஸ் ஹாலீத் பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் படித்தவர். லஷ்கர் இ தொய்பாவின் மற்றொரு இயக்கமான ஜமாத் உத் தவாவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக தம்மை வெளிப்படுத்தியவர் ஹாலீத். 2003-ம் ஆண்டு அமெரிக்கா வெளியிட்ட வெளிநாட்டு தீவிரவாதிகள் பட்டியலில் ஹாலீத் பெயரும் உள்ளது. 2006-ம் ஆண்டு லஷ்கர் இ தொய்பாவின் அரசியல் பிரிவின் தலைவராக ஹாலீத் நியமிக்கப்பட்டார்.
அண்ணனுக்காக...
1990களில் ஜம்மு காஷ்மீரின் பத்கம் மாவட்டத்தில் ஹாலீத்தின் சகோதரர் அபு ஹன்சாலா கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான யுத்தத்தில் ஹாலீத் தம்மையும் இணைத்துக் கொண்டார்.
லக்வி இடத்துக்கு...
குறிப்பாக மும்பை தாக்குதலைத் தொடர்ந்து லக்வி சிக்கிய பின்னர் அந்த இடத்துக்கு மருமகன் ஹாலீத்தை கொண்டு வந்தார் ஹபீஸ் சயீத். ஹாலீத்தின் பிரதான பணியே, இந்தியாவுக்கு எதிரான தாக்குதல்களுக்கு மூளையாக செயல்படுவதுதானாம்,.