அடங்குவதாக இல்லை ஹர்திக் படேல்... 'அகில பாரதிய படேல் நவநிர்மான் சேனா'- புதிய கட்சியை தொடங்கினார்!
டெல்லி: 'இடஒதுக்கீடு கொடு...இல்லையேல் இடஒதுக்கீட்டை ஒழி' என்ற முழக்கத்தை முன்வைத்து போராடி வரும் படேல் சமூகத்தின் தலைவர் ஹர்திக் படேல், அகில பாரதிய படேல் நவநிர்மான் சேனா (ABPNNS) என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். படேல்கள் மட்டுமின்றி குஜ்ஜார்கள், குர்மி மற்றும் மராத்தா சமூகத்தினரும் 'படேல் சமூகத்தினரே' என்பதால் இந்த கட்சியின் பெயரில் இடஒதுக்கீடு போராட்டங்கள் நடத்தப்படும் என்று ஹர்திக் படேல் அறிவித்துள்ளார்.
குஜராத்தில் முற்பட்ட சமூகமாக இருக்கும் படேல்கள், தங்களை இதரபிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீடு வழங்க வேண்டும்- இல்லையேல் இடஒதுக்கீட்டு முறையையே ஒழிக்க வேண்டும் என்று ஹர்திக் படேல் தலைமையில் போராடி வருகின்றனர். ஹர்திக் படேல் தலைமையிலான இந்த போராட்டம் குஜராத் அரசுக்கு கடும் நெருக்கடியை கொடுத்துள்ளது.

இந்த நிலையில் இடஒதுக்கீடு கோரி போராடி வரும் குஜ்ஜார், குர்மி மற்றும் மராத்தா சமூகத்தின் பிரதிநிதிகளை டெல்லியில் ஹர்திக் படேல் நேற்று சந்தித்து பேசினார். இச்சந்திப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஹர்திக் படேல் கூறியதாவது:
நாடு முழுவதும் இடஒதுக்கீட்டு போராட்டத்தை முன்னெடுத்து செல்வதற்காக 'அகில பாரதிய படேல் நவநிர்மான் சேனா' என்ற கட்சியைத் தொடங்கியுள்ளோம். இதில் குஜ்ஜார்கள், குர்மி மற்றும் மராத்தா சமூகத்தினரும் இணைந்துள்ளனர்.
குஜராத், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், டெல்லி மாநிலங்களில் பல்வேறு இடங்களில் இடஒதுக்கீட்டுக்கான பிரமாண்ட பேரணியை நடத்த உள்ளோம். குஜ்ஜார், குர்மி, படேல்கள், மராத்தா சமூகங்கள் ஒரே சமூகமே.
ஜார்க்கண்ட்டில் குர்மிகளையும் மகாராஷ்டிராவில் மராத்தாக்களையும் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும் எங்கள் சமூகம்தான். ஆனாலும் சட்டசபை தேர்தலில் அவரது கட்சியை ஆதரிக்கமாட்டோம்.
இவ்வாறு ஹர்திக் படேல் கூறினார்.












Click it and Unblock the Notifications