மாட்டிறைச்சியை முஸ்லிம்கள் கைவிட்டால் இந்தியாவில் வாழலாம் - ஹரியானா பா.ஜ.க. முதல்வர் மிரட்டல்!
சண்டிகர்: மாட்டிறைச்சி சாப்பிடுவதை முஸ்லிம்கள் கைவிட்டால்தான் இந்தியாவில் அவர்கள் தொடர்ந்து வாழ முடியும் என ஹரியானாவின் ஆளும் பா.ஜ.க. முதல்வர் மனோகர்லால் கட்டார் கூறியதாக வெளியான கருத்தால் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் தாம் தெரிவித்த கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டதாக மனோகர்லால் கட்டார் விளக்கமும் அளித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் தாத்ரியில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக கிளம்பிய வதந்தியால் முஸ்லிம் முதியவர் இக்லால் அடித்து படுகொலை செய்யப்பட்டார். இது நாட்டை உலுக்கியிருக்கிறது.

இந்நிலையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டுக்கு ஹரியானாவின் ஆளும் பா.ஜ.க. முதல்வர் மனோகர்லால் கட்டா அளித்த பேட்டியில், இந்தியாவில் முஸ்லிம்கள் தொடர்ந்து வாழ முடியும். ஆனால், அவர்கள் மாட்டிறைச்சி உண்பதை கைவிட வேண்டும்.
தாத்ரி சம்பவம் தவறுதலாக நடைபெற்றுவிட்டது. கொல்லப்பட்டவர் மாடு குறித்து அவமதிக்கும் வகையில் பேசியதால் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஆனால் ஒருவரை தாக்குதவது, கொல்வதும் தவறானதுதான்.. இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்து தண்டிக்கப்பட வேண்டும். ஏன் அவர்கள் இதை செய்தனர் என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் எனக் கூறியதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
அவரது இந்த பேட்டியைத் தொடர்ந்து, இந்தியாவில் முஸ்லிம்கள் வாழ வேண்டுமெனில் மாட்டிறைச்சி சாப்பிடுவதை கைவிட வேண்டும் என்று ஒரு மாநிலத்தின் முதல்வர் பதவியில் இருப்பவர் எப்படி பேசலாம் என பல்வேறு தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் கிளம்பின.
இதனைத் தொடர்ந்து இன்று விளக்கம் அளித்துள்ள மனோகர்லால் கட்டார், நான் யாரையும் பாகிஸ்தானுக்கு பொபொக வேண்டும் என சொல்லவில்லை. என்னுடைய கருத்துகள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. நான் எந்த ஒரு ஆட்சேபகரமான கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஒவ்வொருவரும் மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். என்னுடைய வாயில் இருந்து வார்த்தைகள் தவறி வந்திருந்தாலும் யாரையும் காயப்படுத்தும் உள்நோக்கத்துடன் நான் கூறவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications