இப்பவே ஹரியானா தேர்தல் ரிசல்ட் தெரிஞ்சுபோச்சு.. 50 சீட்? பாஜக அமைச்சர் கட்டாருக்கு காங்கிரஸ் பதிலடி!
சண்டிகர்: ஹரியானா சட்டசபை தேர்தலில் பாஜக 50 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று 3வது முறையாக ஆட்சி அமைக்கும் என பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் கூறிய நிலையில், காங்கிரஸ் கட்சி கிண்டலாக பதிலடி கொடுத்துள்ளது.
ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைகிறது. இதனிடையே அங்கு காலை 9 மணி நிலவரப்படி 9.5 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஹரியானாவில் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளில் 2 கோடியே மூன்று லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 20,629 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 1031 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 101 பேர் பெண்கள். ஹரியானா தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 8 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின்றன.
இந்நிலையில், மத்திய வீட்டுவ சதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால் கட்டார், ஹரியானா சட்டசபை தேர்தலில் இன்று காலை வாக்களித்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் கட்டார், காங்கிரஸ் கட்சி பொய்களைப் பரப்புவதாகக் குற்றம் சாட்டினார். காங்கிரஸ் கட்சியின் கடந்த கால ஊழல் வேலையின்மைக்கு வழிவகுத்தது என்று குற்றம்சாட்டினார். பாஜக ஆட்சியில், குறிப்பாக ஹரியானாவில் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், ஹரியானா மாநிலத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 50 தொகுதிகளை பாஜக கைப்பற்றும் என்று தான் நம்புவதாகவும் மனோகர் லால் கட்டார் கூறினார். இதற்கு காங்கிரஸ் கட்சி உடனடியாக பதிலடி கொடுத்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் தீபேந்தர் ஹூடா கூறுகையில், “கடந்த முறை பாஜக 75 இடங்களை தாண்டும் என்று மனோகர் லால் கட்டார் கூறினார். ஆனால் 40 இடங்களிலேயே நின்றது. இன்று அவர்கள் 50 இடங்களுக்கு மேல் பெறுவோம் என்று சொல்கிறார்கள்.. அப்படியென்றால் அவர்கள் பெறும் இடங்களின் எண்ணிக்கையை நீங்களே கற்பனை செய்யலாம்” என்று கூறியுள்ளார்.
மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் சுமார் 9.5 ஆண்டுகள் ஹரியானா மாநில முதல்வராக பாஜக சார்பில் பதவி வகித்தார். அவருக்குப் பின் இந்த ஆண்டு மார்ச் மாதம் நயாப் சிங் சைனி, ஹரியானா மாநில முதல்வராகப் பதவியேற்றார். அவரது தலைமையில் பாஜக இந்த முறை தேர்தலில் போட்டியிட்டுள்ளது. நயாப் சிங் சைனி லட்வா தொகுதியில் போட்டியிடுகிறார்.












Click it and Unblock the Notifications