வதேராவின் "நிலக் கொள்ளை": நீதிபதி திங்ரா தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைத்தது ஹரியானா!
சண்டிகர்: சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவின் நிலக் கொள்ளை தொடர்பாக விசாரணை நடத்த டெல்லி உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.என். திங்ரா தலைமையில் கமிஷனை அமைத்து ஹரியானா அரசு உத்தரவிட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா டெல்லி, ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களில் ஏராளமான அரசு மற்றும் விவசாய நிலங்களை மிகக் குறைந்த விலைக்கு வாங்கினார். இந்த மாநிலங்களில் நடந்த காங்கிரஸ் ஆட்சியின் துணை கொண்டு அவரால் பல நூறு ஏக்கர் நிலங்களை வளைக்க முடிந்தது.

ராபர்ட் வதேரா தாம் வாங்கிய நிலங்களை டி.எல்.எப். உள்ளிட்ட தனியார் நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் விலைக்கு விற்றுள்ளார். இந்த நில பேரங்களில் பெரிய அளவில் ஊழல்கள் நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலக் கொள்ளையை முதன் முதலில் அம்பலப்படுத்தியவர் அசோக் கெம்கா என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிதான்.
இது அரசியலில் பெரும் புயலை வீசிக் கொண்டிருந்தது. ஹரியானா சட்டசபை தேர்தலில் இந்த விவகாரத்தை பாரதிய ஜனதா கையில் எடுத்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வதேராவின் நிலக் கொள்ளை குறித்து விசாரணை நடத்துவோம் என்றும் பாரதிய ஜனதா கட்சி அறிவித்தது.
ஹரியானா தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றிய நாள்முதலே வதேராவின் நிலக்கொள்ளை குறித்து விசாரணை நடத்துவோம் என்றும் அக்கட்சி கூறி வந்தது. இந்நிலையில் வதேராவின் நிலக் கொள்ளை குறித்து விசாரணை நடத்த டெல்லி உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி திங்ரா தலைமையில் கமிஷனை அமைத்து ஹரியானா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
ராபர்ட் வதேரா எங்கெங்கு நிலம் வாங்கி மோசடி செய்தார் என்பதை இந்த விசாரணைக் கமிஷன் முழுமையாக விசாரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications