ஜாட் இன மக்கள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை: பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு
சண்டிகர்: இட ஒதுக்கீடு கேட்டு ஜாட் சமூகத்தினர் நடத்திய போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் 30 பலியாகியுள்ளதாக காவல்துறை தலைவர் ஒய்.பி.சிங்கால் தெரிவித்துள்ளார்.
ஹரியாணா மாநிலத்தில் ஜாட் சமூகத்தினர் தங்களை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடத்தினர். போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது. இதனால் மாநிலத்தின் பல பகுதிகள் போர்க்களமாக காட்சி அளித்தன. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பேருந்து, ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களை தீ வைத்து கொளுத்தின.

போராட்டத்தின் எதிரொலியாக ராஜஸ்தானிலும் ஜாட் சமூகத்தினர் பேருந்துக்கு தீ வைத்தனர். இதனால் பதட்டமான சூழ்நிலை நிலவியது. வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர ராணுவம் வரவழைக்கப்பட்டது. இந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 19 பேர் பலியானதாக சில நாட்களுக்கு முன் செய்தி வெளியானது.
இந்நிலையில் ஹரியாணாவின் தற்போதைய நிலை தொடர்பாக காவல்துறை தலைவர் (டிஜிபி) ஒய்.பி.சிங்கால் அளித்துள்ள பேட்டியில் ஹரியாணா ஜாட் போராட்டத்தில் 30 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 200 பேர் காயம் அடைந்துள்ளனர். ஒரு வாரத்திற்கு மேலாக நடந்த போராட்டத்தில் 10 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
மாநிலத்தில் இயல்பு நிலை திரும்பி வருவதால் ராணுவத்தின் கட்டுப்பட்டில் இருந்த பகுதிகளில் இருந்து ராணுவம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. ரயில் பாதைகள், தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
போராட்டங்களில் தீவைப்பு போன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது. போராட்டத்தில் ஈடுபட்டதாக 713 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 133 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications