டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்: அன்னா ஹசாரே, கிரண் பேடி வாழ்த்து
டெல்லி: டெல்லி முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள ஆம் ஆத்மி கட்சி அமைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு அன்னா ஹசாரே, கிரண் பேடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் உள்ள ராம் லீலா மைதானத்தில் நடைபெற்ற விழாவில், பொதுமக்கள் முன்பு அம்மாநில முதலமைச்சராக கெஜ்ரிவால் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.
பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று சமுக ஆர்வலர் அன்னா ஹசாரேவுக்கு கெஜ்ரிவால் இரு முறை அழைப்பு விடுத்திருந்தார். ஆனால்ர பதவி ஏற்பு விழாவில் அன்னா ஹசாரே கலந்துகொள்ளவில்லை. உடல் நிலை சரியில்லாததால் வர இயலவில்லை என்று ஹசாரே தெரிவித்துவிட்டார்.
எனினும், முதல்வராக பதவி ஏற்ற அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அவர் வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பி உள்ளார். அதில் 'நீங்கள் நல்ல முறையில் செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன் ' என்று கூறியுள்ளார்.
இதே போல் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்த முன்னாள் பெண் போலீஸ் அதிகாரி கிரண் பெடியும் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவத்துள்ளார். அவர் தனது டுவிட்டரில், ‘‘சில வருடங்களுக்கு முன் மக்கள் அரசியல் கட்சிகளுக்கு எதிராக சுனாமி போல் எழுந்தனர். தற்போது அவர்களுக்கு தீர்வு எனும் வெளிச்சம் தோன்றியுள்ளது. மாற்றத்தை கற்றுக் கொள்ளும் நேரம் இது " என்று கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.