அரசு பங்களாவை காலி செய்யாத 2 மாஜி பெண் அமைச்சர்களையும் வெளியேற கோர்ட் உத்தரவு
டெல்லி: அரசு ஆடம்பர பங்களாவை விட்டு வெளியேற வேண்டும் என்று முன்னாள் அமைச்சர்களும், காங்கிரஸ் எம்.பிக்களுமான அம்பிகா சோனி மற்றும் குமாரி செல்ஜா ஆகியோருக்கு டெல்லி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
அம்பிகா சோனி மற்றும் குமாரி செல்ஜா ஆகிய காங்கிரஸ் எம்.பிக்கள், அவர்கள் அமைச்சர்களாக இருந்தபோது, ஒதுக்கப்பட்ட Type-VIII வகை பங்களாக்களில் வசிக்கின்றனர். அந்த பங்களாக்களை புதிய அமைச்சர்களுக்கு ஒதுக்க வசதியாக, அவர்கள் இருவரையும், காலி செய்ய ராஜ்யசபா செயலாளர் கடிதம் அனுப்பியிருந்தார். இதை எம்.பிக்கள் கண்டுகொள்ளாத நிலையில், பங்களாக்களை காலி செய்ய அரசு நெருக்கடி கொடுத்தது.

இதையடுத்து இவ்விருவரும் டெல்லி ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். மோடி அரசு தங்கள் மீது காழ்ப்புணர்ச்சி காண்பித்து, பங்களாக்களை விட்டு வெளியேற்றுவதாக அவர்கள் குற்றம்சாட்டினர். கோர்ட்டில் இதற்கு பதில் அளித்த ராஜ்யசபா செயலாளர், "முன்னாள் அமைச்சர்களும், தற்போது எம்.பிக்களாக இருப்பவர்களும் Type-VII வகை பங்களாக்களில்தான் வசிக்க விதிமுறை உள்ளது. தற்போதைய அமைச்சர்கள்தான் Type-VIII வகை பங்களாக்களில் தங்க வேண்டும். ஆனால், தற்போதைய மத்திய அமைச்சர்கள் நான்கு பேர் அதுபோன்ற பங்களாக்கள் கிடைக்காமல், அடுத்த நிலையிலுள்ள வீடுகளில் வசித்து வருகின்றனர்" என்று குறிப்பிட்டார்.
இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி ராஜிவ் ஷகாய் என்ட்லா, எம்.பிக்கள் இருவர் தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications