தீயாய் வேலை பார்க்கும் சூரியன்... ஆந்திராவில் வெயிலுக்கு பலி 1000ஐ தாண்டியது!
ஹைதராபாத்: ஆந்திராவில் வெயிலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
கத்தரி வெயில் நாளையோடு முடியப் போகிறது. ஆனால், வெயிலின் தீவிரம் குறைவதாகத் தெரியவில்லை. நாளுக்கு நாள் வெயிலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து தான் வருகிறது.
கோடை வெயிலின் தாக்கம் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் அதிகமாகக் காணப்படுகிறது. ஆந்திராவில் அதிகப் பட்சமாக 118 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகியுள்ளது. பகல் நேரங்களில் அனல் காற்று வீசுவதால், வீடுகளை விட்டு வெளியேறவே மக்கள் அஞ்சுகின்றனர்.

நாடு முழுவதும் வெயிலின் தாக்கத்திற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1418 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக வெயிலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் அதிகமாக உள்ளது. கத்தரி வெயில் தொடங்கியதில் இருந்து இதுவரை ஆந்திராவில் 1027 பேர் பலியாகியுள்ளனர். இதேபோல், தெலுங்கானாவில் 340 பேர் வெயிலுக்கு உயிரிழந்துள்ளனர். தெலுங்கானாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 74 பேர் பலியாகியுள்ளனர். இந்தத் தகவல்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளன.
ஆந்திராவில் மற்ற மாநிலங்களை விட பிரகாசம் மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் வெயிலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
இது தவிர தலைநகர் டெல்லியில் வெயிலுக்கு இரண்டு பேர் பலியாகியுள்ளனர். இதே போல உத்திர பிரதேசம், ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. ஒடிசாவில் 44 பேரும், குஜராத்தில் 7 பேரும் வெயிலின் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளனர்.
வெயிலின் தாக்கம் தெலுங்கானாவில் மேலும் இரண்டு நாட்களுக்கும், ஆந்திராவில் மூன்று நாட்களுக்கும் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications