நாடு முழுவதும் வெயிலுக்கு 128 பேர் பலி: ஒடிசாவில் 118 டிகிரி வெப்பம் கொளுத்துகிறது
புவனேஸ்வர்: நாடுமுழுவதும் வெயிலின் கோரத்தாண்டவம் அதிகரித்து வருகிறது. ஒடிஷா மாநிலத்தில் 118 டிகிரி வரை வெப்பம் பதிவாகி வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தால் ஒடிசா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இதுவரை 128 பேர் பலியாகி இருக்கிறார்கள்.
வெயிலின் தாக்கம் மேலும் நீடிக்கும் என சொல்லப்படும் நிலையில், ஒடிசாவில் மட்டும் கொளுத்தும் வெயிலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 79ஆக உயர்ந்துள்ளது.
ராஜஸ்தான், ஒடிசா, மகாராஷ்டிரம், டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்டு நீர் நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. இதனால் அங்குள்ள பல்வேறு பகுதிகளில் தண்ணீர்ப் பஞ்சம் தாண்டவமாடுகிறது.
கோடைக் காலத்தில் வழக்கமாக இருக்கும் வெப்பநிலையைக் காட்டிலும் அதிகமாக கொளுத்துவதால் வெயிலின் கொடுமை தாளாமல் மயக்கம் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. தமிழ்நாட்டிலும் 110 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேலாக வெப்பம் பதிவாகி வருகிறது.

கொளுத்தும் வெயில்
ஒடிசாவில் 16 நகரங்களில் வெப்பம் 104 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியுள்ளது. 7 நகரங்களில் வெப்பநிலை 113 டிகிரி பாரன்ஹீட்டை எட்டியது. டிட்லாகர் நகரில் உச்சட்டமாக 118.4 டிகிரியை தொட்டது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஒடிசாவில் வெயிலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 79 ஆக உயர்ந்துள்ளது.

அரசு அறிவுறுத்தல்
வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என ஒடிசா அரசு அறிவுறுத்தியுள்ளது. எனினும் வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை
அதிகபட்ச வெயிலை முன்னரே எதிர்பார்த்த மாநில அரசு, வெயிலைச் சமாளிக்க போதுமான தண்ணீரை விநியோகம் செய்யவும், உயிர் காக்கும் மருந்துகளை இருப்பு வைக்கவும் கடந்த பிப்ரவரி மாத மத்தியில் 30 மாவட்டங்களின் ஆட்சியர்களை அறிவுறுத்தியிருந்தது.

தெலங்கானாவில் பலி
தெலங்கானாவில் பத்ராசலம், கம்மம், நல்கொண்டா மற்றும் நிஜாமாபாத் ஆகிய நகரங்களில் அதிகபட்ச வெப்பநிலையாக 113 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளது. வெயில் கொடுமையால் பாதிக்கப்பட்டு, இதுவரை 49 பேர் பலியாகிவிட்டனர். அதில் மஹபூப்நகர் மாவட்டத்தில் மட்டும் 39 பேர் உயிரிழந்தனர்.

ரூ.50,000 நிவாரணம்
இந்நிலையி்ல், ஒடிசா மற்றும் தெலுங்கானா மாநில அரசுகள் வெயிலுக்கு பலியானோர் குடும்பத்தினருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணமாக வழங்குவதாக அறிவித்துள்ளன. தண்ணீர் பிரச்சனை ஒருபக்கம், கொளுத்தும் வெயில் மறுபக்கம் என நாடு முழுவதும் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications