தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு இடம்பெயர்ந்து வெளுத்து வாங்கும் மழை: வீடுகளில் முடங்கிய மக்கள்
ஹைதராபாத்: தமிழகத்தில் இருந்து ஆந்திரா நோக்கி சென்ற குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் ஆந்திரா, ராயலசீமாவில் கனமழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் இருந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஆந்திரா நோக்கி சென்றது. இதனால் ஆந்திராவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. ராயலசீமா பகுதியில் கனமழையால் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
மச்சிலிப்பட்டினம், குண்டூர், நெல்லூர், பீமாவரம், ராஜமுந்திரி, காக்கிநாடா, விசாகப்பட்டினம், விழியநகரம் உள்ளிட்ட இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது. ஆந்திரோவின் கடலோர பகுதிகளில் பல இடங்களுக்கு சென்னை போன்ற நிலை ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது.

மழை
இன்னும் 24 மணிநேரத்திற்கு பல்வேறு இடங்களில் கனமழையும், சில இடங்களில் மிக கனமழையும் பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளம்
சித்தூர் மாவட்டத்தில் உள்ள 12 ஆயிரத்து 500 ஏரிகளில் 4 ஆயிரத்து 500 ஏரிகள் நிரம்பி வெள்ள நீர் கிராமங்களில் புகுந்தது. மேலும் 12 ஏரிகள் உடைந்து நீர் கிராமங்களுக்குள் புகுந்து நூற்றுக்கணக்கான குடிசைகளை அடித்துச் சென்றது.

ஸ்ரீகாளஹஸ்தி
ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள சுவர்ணமுகி ஆற்றில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலுக்குள் நீர் புகுந்துள்ளது.

நெல்லூர்
நெல்லூர், கடப்பா, குண்டூர், சித்தூர், புத்தூர், நகரி, வெங்கடகிரி, நாயுடுபேட்டை ஆகிய நகரங்களிலும் கனமழை பெய்துள்ளது. கடலோரப் பகுதிகளில் உள்ள சுமார் 10 ஆயிரம் பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

திருமலை
தண்ணீர் பற்றாக்குறையாக இருந்த கோவில் நகரமான திருமலையிலும் கனமழை பெய்துள்ளது. இதனால் ஏழுமலையான கோவிலுக்கு செல்லும் மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

சாலைகள்
கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கனமழையால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மழையால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். சாலைகளில் வெள்ளநீர் ஓடிக் கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications