குண்டும் குழியுமான குஜராத் மாடல்.. அம்பலப்படுத்திய மழை! பள்ளங்களான பாதைகள்.. சல்லடைகளான சாலைகள்
அஹமதாபாத்: நாடு முழுவதும் குஜராத் மாடலை முன்னுதாரணமாக கொண்டு பாஜகவினர் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் அண்மையில் அம்மாநிலத்தில் கொட்டித் தீர்த்த கனமழை குஜராத் மாடலை அம்பலப்படுத்தி இருக்கிறது.
Recommended Video
2014 மக்களவைத் தேர்தல் நேரம். அப்போது குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக நிறுத்தியது பாஜக.
எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்போடு பல விதமான தேர்தல் பிரச்சாரங்களில் அக்கட்சி ஈடுபட்டு வந்தது.

குஜராத் மாடல் பிரச்சாரம்
குறிப்பாக 2014 தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி முதலமைச்சராக இருந்த குஜராத் மாநிலத்தின் வளர்ச்சி என்று கூறி பல்வேறு தகவல்களை பாஜகவினர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து, இதேபோல் உங்கள் மாநிலம் வளர வேண்டும் என்றால் தாமரைக்கு வாக்களியுங்கள் என்று பரப்புரை செய்தார்கள். வெளிநாடுகளில் உள்ள பேருந்து நிலையங்கள் சாலைகள், நகரங்களின் படங்கள் குஜராத் என்று கூறி பகிரப்பட்டன.

சீனா, துபாய் படங்கள்
2014 தேர்தலில் பாஜக வெற்றிபெற்று நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்க பாஜகவின் இந்த வகை பிரச்சாரம் பெரும் பயனளித்தது. ஆனால், அதன் பிறகே குஜராத் மாடல் என்று கூறி பகிரப்பட்ட பல படங்கள் சீனா, துபாய், அமெரிக்கா ஆகிய நாடுகளில் எடுக்கப்பட்டவை என்பது தெரியவந்தது. குறிப்பாக அமெரிக்க அதிபராக இருந்த டொனால்டு ட்ரம்ப் குஜராத் வருகை தந்தபோது குடிசை பகுதிகளை மறைக்க சுவர் எழுப்பப்பட்டது பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது.

அம்பலப்படுத்திய மழை
ஆனால், இன்றளவும் பாஜக தலைவர்கள் பலர் குஜராத் மாடலை சுட்டிக்காட்டத் தவறுவதில்லை. பிரதமர் நரேந்திர மோடியே அண்மையில் உறையாற்றுகையில் குஜராத்தில் தான் ஆட்சி செய்த விதத்தை நாடு முழுவதும் அமல்படுத்துவதாக கூறினார். ஆனால், சமீபத்தில் குஜராத் மாநிலத்தில் கொட்டித் தீர்த்த கனமழை குஜராத் மாடல் என்ற பெயரில் பூசப்பட்டிருந்த சாயத்தை நீக்கி உண்மையான தோற்றத்தை அம்பலபடுத்தி இருக்கிறது.

சாலையில் கழிவு நீர் தொட்டி
குறிப்பாக தலைநகர் அகமதாபாத்தில் கனமழை காரணமாக சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளித்த புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அகமதாபாத்தில் உள்ள சுரபி பூங்கா அருகே புதிதாக அமைக்கப்பட்ட சாலையில் ராட்சத பள்ளம் விழுந்து கழிவு நீர் குழியாக காட்சித் தரும் வீடியோ அண்மையில் வெளியானது. இந்த சாலை ஒரு மாதத்துக்கு முன்புதான் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

குண்டு குழியுமான சாலைகள்
அதேபோல் அகமதாபாத்தின் வாபி - சில்வாசா தேசிய நெடுஞ்சாலையில் மழையால் விழுந்த பள்ளங்களின் படங்கள் வெளியாகி அங்குள்ள சாலைகளின் தரத்தை வெளிச்சம்போட்டு காட்டின. ராட்சத பள்ளங்களை தாண்டி அடிக்கு ஒரு பள்ளம் என 10 கிலோ மீட்டர் தூரம் தேசிய நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக மாறியது. சூரத் மற்றும் நவ்சேரி மாவட்டங்களில் மழையால் சாலைகள் மோசமடைந்ததால் சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

தரமற்ற சாலைகள்
இந்த மோசமான சாலைகளுக்கு கனமழையை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் காரணமாக கூறினாலும், தரமற்ற சாலைகள் அமைக்கப்பட்டதன் காரணமாகவே மழைக்கு சாலைகள் பழுதடைந்துள்ளதாக குற்றம்சாட்டுகின்றனர் பொதுமக்கள். குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்கும் பணிகளை நெடுஞ்சாலைத்துறை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் அதனால் பெரிய அளவில் தங்கள் சிரமம் தீரவில்லை என்பதே வாகன ஓட்டிகளின் குற்றச்சாட்டாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications