ஊரடங்கு உத்தரவை மீறி ஹெக்கனஹள்ளியில் தொடர் போராட்டம்- ஜெ. உருவபொம்மைகள் எரிப்பு!!
பெங்களூர்: ஊரடங்கு உத்தரவை மீறி பெங்களூரு ஹெக்கனஹள்ளியில் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கு உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பெங்களூரு ஹெக்கனஹள்ளியில் நேற்று நடந்த கலவரத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் வாகனத்தின் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தி தீ வைக்க முயற்சி மேற்கொண்டது. அப்போது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் பிரதீப், யோகேஷ், ராஜேஷ், உமேஷ் ஆகியோர் படுகாயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
ஒருவர் பலி
ஆனால் இதில் சிகிச்சை பலனின்றி உமேஷ் என்பவர் உயிரிழந்தார். இதனால் கன்னட அமைப்பினர் கொந்தளித்து தமிழகத்துக்கு எதிரான போராட்டங்களைத் தீவிரப்படுத்தினர்.
நிவாரணத் தொகை அதிகரிப்பு
இதனிடையே ஹெக்கனஹள்ளி துப்பாக்கிச் சூட்டில் பலியான உமேஷ் குடும்பத்துக்கு முதலில் ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்திருந்தது கர்நாடக அரசு. தற்போது ரூ10 லட்சமாக நிவாரணத்தை உயர்த்தி அறிவித்துள்ளது கர்நாடக அரசு.
ஊரடங்கை மீறி போராட்டம்
மேலும் துப்பாக்கிச் சூடு நடந்த ஹெக்கனஹள்ளியில் இன்றும் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள போதும் அங்கு கன்னட அமைப்பினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
30 பேர் கைது
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உருவபொம்மைகளை எரித்தனர். வீதிகளில் டயர்களை எரித்து வீசியுள்ளனர். இதுவரை போலீசார் 30 பேரை கைது செய்துள்ளனர். இதனால் அங்கு உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.