இமாச்சல பிரதேச காங். முதல்வர் வீரபத்ர சிங் மீது ஊழல் புகார்- பதவி விலக பா.ஜ.க. கோரிக்கை!
டெல்லி: பாரதிய ஜனதாவை சேர்ந்த மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் மீது ஊழல் புகார்களை சுமத்தி பதவி விலகக் கோரி வருகிறது காங்கிரஸ். இதற்கு பதிலடியாக காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்களின் ஊழல்களையும் நிலுவையில் இருக்கும் வழக்குகளை தூசுதட்டியும் பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டு வருகிறது. தற்போது காங்கிரஸ் ஆளும் இமாச்சலப் பிரதேசத்தின் முதல்வர் வீரபத்ர சிங் மீது பா.ஜ.க. ஊழல் புகார் தெரிவித்துள்ளது.
கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்திலேயே வீரபத்ரசிங் மீது சட்டவிரோத சொத்து குவிப்பு தொடர்பான சி.பி.ஐ. விசாரணையைத் தொடங்கியது.

வீரபத்ரசிங், அவரது மனைவி பிரதீபா சிங், மகன் விக்கிரமாதித்யா சிங், மகள் அபராஜித சிங் ஆகியோர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர். அதாவது 2009-11ஆம் ஆண்டு காலத்தில் மத்திய அமைச்சராக வீரபத்ரசிங் இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக ரூ6.10 கோடி சொத்து குவித்தார் என்பது சி.பி.ஐ. புகார்.
இதை மறைப்பதற்காக ஏஜெண்ட் ஆனந்த் சவுகான் மூலம் போலியான எல்.ஐ.சி. பாலிசிகளை உருவாக்கி அதில் முதலீடு செய்திருப்பதாக அவர்கள் கணக்குக் காட்டியிருந்தனர். வருமான வரித்துறையிடம் 2009ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை விவசாயத்தின் மூலம் வருமானம் கிடைத்தது பற்றி வீரபத்ர சிங் தெரிவித்து வரி விலக்கு பெற்றிருக்கிறார்.
ஆனால் 2012ஆம் ஆண்டு திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை சமர்ப்பிக்கும் போது அவரது வருவாயானது சுமார் 18 முதல் 30 மடங்கு அதிகரித்திருப்பது தெரியவந்தது. அத்துடன் ஆப்பிள் தோட்டம் மூலம் ரூ6.10 கோடி வருவாய் கிடைத்ததாகவும் வீரபத்ரசிங் குடும்பத்தினர் தெரிவித்துள்ளது சந்தேகத்தை கிளப்பியிருந்தது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் வக்முல்லா சந்திரசேகர் என்ற தொழிலதிபரிடம் இருந்து வீரபத்ரசிங் குடும்பம் லஞ்சம் பெற்று அதை விவசாய வருமானத்தின் கணக்கில் காட்டியிருப்பது தெரியவந்தது. இந்த சந்திரசேகருக்கு விதிமுறைகளை மீறி நீர்மின் திட்டம் உற்பத்திக்கு வீரபத்ரசிங் அனுமதி கொடுத்திருக்கிறார். இதே சந்திரசேகர் நிறுவனம் தகுதியற்றது எனக் கூறி முன்னர் இந்த நீர்மின் உற்பத்தி திட்டத்துக்கு வீரபத்ரசிங் அரசு மறுத்த நிலையில் லஞ்சம் பெற்றுக் கொண்டு மீண்டும் அனுமதி கொடுத்தார் என்பது புகார்.
இந்த லஞ்சப் பணத்தின் ஒரு பகுதியில் டெல்லியில் சுல்தான் பகுதியில் வீரபத்ரசிங் குடும்பத்தினர் பண்ணை வீட்டை வாங்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த பண்ணை வீட்டை ரூ1.20 கோடிக்கு வாங்கியதாக பதிவு செய்திருந்தாலும் எஞ்சிய ரூ5 கோடியை பணமாகவே கொடுத்திருக்கின்றனர் என்பதும் வருமான வரித்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதேபோல் வக்முல்லா சந்திரசேகரின் தாரிணி குழுமங்களில் வீரபத்ரசிங்கின் மனைவி பங்குகளை வைத்திருப்பதும் வருமான வரித்துறை கண்டுபிடித்திருக்கின்றனர்.
பதவி விலக சொல்வார்களா?
தற்போது இந்த விவகாரத்தை பாரதிய ஜனதா கையில் எடுத்துள்ளது. இது தொடர்பாக டெல்லியில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நேற்று கூறியதாவது:
இமாச்சலப் பிரதேச அரசின் நீர் மின் உற்பத்தி திட்டம் ஒரு தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட இருந்தது. அது ரத்து செய்யப்பட்டது.
ஆனால் மீண்டும் அதே நிறுவனத்துக்கே அந்த நீர் மின் உற்பத்தித் திட்டம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக முதலமைச்சர் வீரபத்ரசிங்குக்கு கோடிக்கணக்கில் அந்நிறுவனம் லஞ்சம் கொடுத்துள்ளது.
வீரபத்ர சிங்கின் மகன் விக்ரமாதித்ய சிங், மகள் அபராஜிதா ஆகியோருக்கு சொந்தமான கட்டுமான நிறுவனத்துக்கு இந்த பணம் கொடுக்கப்பட்டுள்ளது.
அந்தப் பணத்தைக் கொண்டு வீரபத்ர சிங்கின் மகனும், மகளும் மெஹ்ரோலியில் பண்ணை வீட்டை வாங்கியுள்ளனர். வீரபத்ர சிங் முறைகேடாக சம்பாதித்த பணத்தைக் கொண்டு தனது குடும்ப உறுப்பினர்களின் பெயரில் சொத்துகளை வாங்கி குவித்துள்ளதாக வருமான வரித் துறையின் விசாரணை அறிக்கையிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களது இந்தக் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், துணைத் தலைவர் ராகுல் காந்தியும் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். தற்போது லஞ்ச குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ள வீரபத்ர சிங்கை சோனியாவும், ராகுலும் பதவிவிலகக் கோருவார்களா?
இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
வருமானவரித்துறை கடிதம்
இந்த நிலையில்தான் வீரபத்ரசிங் விவகாரத்தில் தாங்கள் மேற்கொண்டு வரும் விசாரணை விவரங்களை அமலாக்கப் பிரிவுக்கு கடிதம் மூலமாக அனுப்பியுள்ளது வருமான வரித்துறை. வீரபத்ரசிங்கின் பணப் பரிமாற்றத்தில் அன்னிய செலாவணி மோசடி ஏதும் நிகழ்ந்துள்ளதா என ஆராயுமாறும் அமலாக்கப் பிரிவிடம் வருமான வரித்துறை கேட்டுக் கொண்டுள்ளது புதிய சிக்கலை உருவாக்கியிருக்கிறது.
வீரபத்ரசிங் மறுப்பு
ஆனால் சிம்லாவில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் வீரபத்ர சிங், பாரதிய ஜனதா முன்வைக்கும் ஊழல் குற்றச்சாட்டை மறுத்தார். அரசியல் உள்நோக்கத்துடன் பாரதிய ஜனதா கட்சி தம் மீது பொய்க் குற்றச்சாட்டை கூறியுள்ளதாகவும் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications