தீவிரவாதத்துக்கு எதிரான போரில் ப.சிதம்பரத்தால் இந்தியா பலவீனமடைந்தது: ராஜ்நாத்சிங் பரபரப்பு பேச்சு
டெல்லி: 'இந்து தீவிரவாதம்' என்ற வார்த்தையை பயன்படுத்தி, தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைக்கு முன்னாள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பின்னடைவை ஏற்படுத்திவிட்டார் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார். மேலும் தீவிரவாதத்திற்கு மதம், ஜாதி சாயம் பூச தேவையில்லை என்றும் அவர் கோபமாக தெரிவித்தார்.
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் கடந்த 27ம் தேதி நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் குறித்து லோக்சபாவில் இன்று ராஜ்நாத்சிங் அறிக்கை சமர்ப்பித்தார். அப்போது ராஜ்நாத்சிங் கூறியதாவது:

இந்த நாட்டுக்கு தீவிரவாதம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறிவருகிறது. இந்த நாடாளுமன்றமும், நாடும், தீவிரவாதத்தை எதிர்க்கும் விவகாரத்தில் பிளவுபட்ட கருத்தை கொண்டிருக்க கூடாது. தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட்டு உயிரை தியாகம் செய்து வருகின்றனர் நமது ராணுவத்தினர். ஆனால் மற்றொருபுறம் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக சிலர் குரல் கொடுக்கின்றனர். இந்த நாடு இதை இப்படி ஏற்கும்?
இந்த அரசும், நமது பிரதமரும், சவால்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். இவ்வாறு ராஜ்நாத்சிங் கூறிக் கொண்டிருந்தபோது, காங்கிரஸ் உறுப்பினர்கள் கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்டனர். தீவிரவாத தாக்குதலுக்கு மத்திய அரசின் தோல்வியே காரணம் என்று அவர்கள் கோஷமிட்டனர்.
இதனால் கோபமடைந்த ராஜ்நாத்சிங் மேலும் கூறியதாவது: கடந்த 2013 ஆம் ஆண்டு அப்போதய உள்துறை அமைச்சராக பதவி வகித்த ப சிதம்பரம், இந்து தீவிரவாதம் என்ற புதிய வார்த்தையை இதே நாடாளுமன்றத்தில் பயன்படுத்தினார். இதனால் தீவிரவாதத்துக்கு எதிரான விசாரணையின் போக்கை அவர் மாற்றிவிட்டார்.
இது தீவிரவாதத்துக்கு எதிரான நமது நாடு மேற்கொண்டுவரும் போரை பலவீனப்படுத்திவிட்டது. இதன் விளைவாக பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதி ஹபீஸ் சயீத் (லஷ்கர்-இ-தய்பா நிறுவனர்) அப்போதய உள்துறை அமைச்சரை பாராட்டினார். தீவிரவாதம் தீவிரவாதம்தான், அதற்கு மதமோ, ஜாதியோ கிடையாது. இவ்வாறு ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.
இந்தியாவில் நடைபெறும் தீவிரவாத தாக்குதல்களை முன்வைத்து, பாகிஸ்தானை சர்வதேச சமூகத்தில் தனித்து வைத்திருக்க இந்தியா மேற்கொண்ட முயற்சியை, ப.சிதம்பரத்தின், உள்நாட்டு தீவிரவாதம் என்ற பேச்சு முறியடித்துவிட்டதாக ராஜ்நாத்சிங் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications