ரூ.500, 1000 வைத்திருந்தால் சிறை இல்லை.. 10,000 அபராதமாம்.. எதிர்ப்பு கிளம்பியதால் ஜகா வாங்கிய மோடி
மார்ச் 31ம் தேதிக்கு பிறகு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வைத்திருந்தால் சிறை தண்டனை இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
டெல்லி: பண மதிப்பு நீக்கம் அமலுக்கு வந்து 50 நாட்கள் கடந்த நிலையில், மத்திய அரசு மார்ச் 31ம் தேதிக்கு பிறகு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் 10 வரை வைத்திருந்தால் சிறை தண்டனை என்று அறிவித்திருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து மத்திய அரசு இதனை விலக்கி கொண்டுள்ளது.
பண மதிப்பு நீக்கம் அமலுக்கு வந்து 50 நாட்கள் முடிந்த நிலையில், புதிய அவசரச் சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி வரும் மார்ச் 31ம் தேதிக்கு பிறகு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் கையில் வைத்திருந்தால் அவர்களுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவதற்கும் அபராதம் விதிக்கப்பதற்கும் வழிவகை செய்யப்பட்டது.
இந்த அவசரச் சட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பு நாடு முழுவதும் கிளம்பியது. இதனையடுத்து, மார்ச் 31ம் தேதிக்கு பிறகு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வைத்திருந்தால், சிறைதண்டனை என்பதை ரத்து செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு பதிலாக குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதற்காக மத்திய அரசு கொண்டு வந்திருந்த அவசரச் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. திருத்தப்பட்ட இந்த அவசரச் சட்டம் ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது.
முன்னதாக, கடந்த மாதம் 9ம் தேதி முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. வங்கிகள், அஞ்சலகங்களில் பழைய நோட்டுக்களைக் கொடுத்து மாற்றிக் கொள்ள பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த பழைய நோட்டுக்களை மாற்றிக் கொள்ள டிசம்பர் 30ம் தேதி கடைசி நாள் என்ற நிலையில் நேற்று டெல்லியில் மத்திய அமைச்சரவை அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.