டெல்லியில் உருளையை ஒளித்து வைப்போர் மீது நடவடிக்கை- உள்துறை அமைச்சர் உத்தரவு
டெல்லி: டெல்லியில் உள்ள வெங்காயம், உருளைக்கிழங்கு பதுக்கல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
உருளை, வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய காய்கறிகளின் விலை உயர்வை தொடர்ந்து டெல்லியில் உள்ள, பதுக்கல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உத்தரவிட்டுள்ளார். விலைவாசி உயர்வு குறித்து டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங், தலைமை செயலாளர் எஸ்.கே.வத்சவா, போலீஸ் கமிஷனர் பி.எஸ்.பாசி, ஆகியோருடன், இன்று ராஜ்நாத்சிங் ஆலோசனை நடத்திய பிறகு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நஜீப் ஜங் நிருபர்களிடம் கூறுகையில், நிலைமையை ஆய்வு செய்யவும், விலைவாசியை குறைக்கவும் இந்த ஆலோசனை நடத்தப்பட்டது. கடந்த மாதம் முதலே விலைவாசி ஏற்றத்தை குறைக்க நடவடிக்கையை துவங்கியுள்ளோம். வேன்கள் மூலமாக உருளை, வெங்காயம் போன்றவற்றை விற்பனை செய்து வருகிறோம் என்றார்.